கொவிட்-19 சூழல் காரணமாக சிங்கப்பூர்வாசிகளின் வருமான நிலை சரிந்துள்ளதாகவும், கடந்த ஜூன் மாத நிலவரப்படி வேலையில் இருப்போர் விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதாகவும் மனிதவள அமைச்சு இன்று (டிசம்பர் 3) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளின் இடைநடு (median) வருமானம் கடந்த ஆண்டில் இருந்த $4,563லிருந்து 0.6% குறைந்து $4,534 ஆகியுள்ளது.
பணவீக்கத்தில் கணக்கில் கொண்ட பிறகு மெய்யான இடைநடு வருமானம் 0.3% குறைந்தது.
முழு நேர வேலையில் இருப்பவர்களின் வருமான தரவு இது. நிறுவனங்கள் வழங்கும் மத்திய சேமநிதி பங்கு இதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்சி அல்லது தனியார் கார் ஓட்டுநர்கள், உணவங்காடி ஊழியர்கள் போன்ற குறைந்த வருமான, சுய தொழில் ஊழியர்களின் வருமானமும் சுற்றுப்பயணிகளின் வருகை இன்மை, வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் ஏற்பாடு, உணவகங்களில் அமர்ந்து உணவருந்த முடியாத நிலை போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஆனால், குறைந்த வருமான ஊழியர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வேலைநலன் துணை வருமானம், வேலைநலன் சிறப்பு வழங்கீடு போன்றவற்றின் மூலம் அவர்களின் வருமானம் கடந்த ஆண்டு இருந்த அளவுக்கு சரிக்கட்டப்பட்டது.
15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூர்வாசிகளின் ஒட்டுமொத்த வேலை விகிதம் 64.5% ஆக கடந்த ஜூன் மாதத்தில் சுருங்கியது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகான ஆகக் குறைந்த விகிதம் இது.
கொவிட்-19 பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மீட்டுக் கொள்ளப்படுவதற்கு முன்பான ஜூன் மாத நிலவரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் மாதத்தில் மனிதவள அமைச்சு வெளியிட்ட மூன்றாம் காலாண்டு தரவுகளில், உள்ளூர்வாசிகளின் வேலை நிலவரம் மேம்பட்டதுடன் வேலையின்மை அதிகரிப்பு விகிதம் குறைந்தது.