தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் வழித்தடத்தில் ரயில் சேவைகள் இன்று (டிசம்பர் 4) காலை ஐந்து மணி நேர தடங்கலுக்குப் பிறகு வழக்கநிலைக்குத் திரும்பின.
உட்லண்ட்ஸ் நார்த் மற்றும் உட்லண்ட்ஸ் சவுத் ஆகிய நிலையங்களுக்கு இடைப்பட்ட சேவை தொடங்கி இருப்பதாக இன்று காலை 10.56 மணிக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் டுவிட்டரில் கூறியது.
வழக்கமான இலவச பேருந்து சேவைகளையும் இடைவழி பேருந்து சேவையையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அது தெரிவித்தது.
சமிக்ஞை கோளாறு காரணமாக ரயில் சேவை இல்லை என்று காலை 5.43 மணிக்கு அந்த நிறுவனம் அறிவித்தது.
அந்த வழித்தடத்தில் உள்ள மூன்று ரயில் நிலையங்களில் ரயில் சேவை பொதுவாக காலை 5.40 மணிக்குத் தொடங்கும்.
உட்லண்ட்ஸ் நார்த் மற்றும் உட்லண்ட்ஸ் சவுத் நிலையங்களுக்கு இடையில் ரயில் சேவை தொடங்கவில்லை என்று காலை 7.23 மணிக்கு எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. இடைவழிப் பேருந்துச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும்படி அது பயணிகளுக்கு ஆலோசனை கூறியது. இதற்காக தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக சேவை பாதிக்கப்பட்டது என்று ஃபேஸ்புக் பக்கத்தில் எஸ்எம்ஆர்டி விளக்கம் அளித்தது. அந்த மென்பொருளைச் சரிபடுத்திய பிறகே சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது.
இந்தப் பணியை ‘ஆல்ஸ்டம்’ என்ற நிறுவனத்தின் பொறியாளர்கள் மேற்கொண்டதாகவும் அது தெரிவித்தது.
அதையடுத்து சேவை வழக்க நிலைக்குத் திரும்பியதாகவும் நிலவரங்கள் பற்றி பயணிகளுக்கு ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் பயணிகளுக்கு உதவுவதற்காக 20 ஊழியர்கள் பணியில் இருந்ததாகவும் தெரிவித்தது.
புதிய ஒரு ரயில் வழித்தடத்தில் இத்துடன் இந்த ஆண்டில் 2வது தடவை கோளாறு ஏற்பட்டுள்ளது.
ஈஸ்ட் வெஸ்ட் வழித்தடத்தில் துவாஸ் லிங்க் மற்றும் துவாஸ் வெஸ்ட் ரோடு நிலையங்களுக்கு இடையில் சென்ற அக்டோபரில் மின்கம்பி பழுதாகிவிட்டதால் மூன்று ரயில் வழித்தடங்களில் சேவை பாதிப்பு ஏற்பட்டது.