சுகாதாரத் துறையில் கிட்டத்தட்ட 5,500 வேலைவாய்ப்புகள் உள்ளன. இதில் நான்கில் மூன்று நீண்ட காலப் பணிகள்.
இந்த 4,080 நீண்டகால பணிகளில் 40 விழுக்காடு அல்லது 1,530 வேலைகள் தாதியர், துணை சுகாதார வல்லுநர்கள், நிதி - மனிதவள நிர்வாகிகள் போன்ற நிபுணத்துவ, நிர்வாகப் பதவிகளாகும்.
ஏனைய 2,550 நீண்டகால வேலைவாய்ப்புகள் ஆதரவு சேவைகள், சிகிச்சை உதவியாளர்கள், நோயாளி சேவை உதவியாளர்கள் போன்றவையாகும்.
1,390 குறுகிய கால வேலைகளில், 95% அல்லது 1,330 வேலைகள் ஆதரவு, நிர்வாக உதவி தொடர்பான வேலைகள் ஆகும். இந்த குறுகிய கால வேலைகளில், ஏறக்குறைய 5 விழுக்காடு அல்லது 60 வேலைகள் நிபுணத்துவ, நிர்வாகப் பதவிகளாகும்.
இந்த 5,500 நீண்ட மற்றும் குறுகிய கால வேலைகள் கடந்த மாத இறுதியில் இந்த துறையில் உருவாக்கப்பட்ட 6,700 வேலை, வேலைப் பயிற்சி, பயிற்சி வாய்ப்புகளின் ஒரு பகுதியாகும் என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட வாரந்திர வேலைவாய்ப்பு நிலைமை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வேலைகளுடன், கிட்டத்தட்ட 470 நிறுவனம் வழங்கும் பணியிடப் பயிற்சிகளும், 760 பயிற்சி வாய்ப்புகளும் உள்ளன.
இதில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை சிங்ஹெல்த், தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு, தேசிய சுகாதார குழு போன்ற பொது சுகாதார குழுமங்களும், சமூக பராமரிப்பு நிறுவனங்களான ரென் சி மருத்துவமனை, வான்கார்ட் ஹெல்த்கேர், செயின்ட் லூக்கின் எல்டர்கேர் போன்றவையும் வழங்குகின்றன. ஏனைய வேலைகளை சிங்கப்பூர் பார்க்வே மருத்துவமனைகள், ஹெல்த்வே மருத்துவக் குழு, க்யூ&எம் பல் மருத்துவ மையம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன.
ஏப்ரல் முதல் கடந்த மாதம் வரை சுகாதாரத் துறையில் ஏறக்குறைய 8,350 பேர் வேலை, வேலைப் பயிற்சி, பயிற்சி வாய்ப்புகளில் அமர்த்தப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய அச்சுப் பதிப்பை நாடுங்கள்!

