லோயாங் வட்டாரத்தில் அமைந்துள்ள வீட்டில் 49 வயது ஆடவர் ஒருவரை, அவரது 14 வயது மகன் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் இன்று (டிசம்பர் 11) அச்சிறுவன் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர்.
லோயாங்கில் உள்ள ஃபுளோரா ரோட்டில் அமைந்துள்ள வீடு ஒன்றில் உதவி தேவைப்படுவதாக காலை 10.10 மணிக்கு அழைப்பு வந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
ஈடல்வீஸ் பார்க் கொண்டோமினியத்தில் உள்ள ஒரு புளோக்கின் நான்காவது மாடியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
அதிகாரிகள் அம்முகவரிக்குச் சென்று பார்த்தபோது, காயங்களுடன் ஆடவர் அசைவற்றுக் கிடந்ததாக போலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
சுயநினைவில்லாத நிலையில் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆடவர், பின்னர் உயிரிழந்துவிட்டார்.
சம்பவத்தின் தொடர்பில் போலிஸ் விசாரணை தொடர்கிறது.
சிறுவனின் மனநலத்தைக் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இம்மாதம் 31ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.