சிலி, கொலம்பியா, மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகள் அடங்கிய பசிபிக் கூட்டணியுடன் கூடிய தாராள வர்த்தக உடன்பாட்டில் அடுத்த ஆண்டில் கையெழுத்திட சிங்கப்பூர் திட்டமிடுகிறது.
மூன்று ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடந்ததை அடுத்து பசிபிக் கூட்டணி- சிங்கப்பூர் தாராள வர்த்தக உடன்பாடு குறிப்பிடத்தக்க முடிவுக்கு வந்துள்ளதாக பிரதமரின் செய்தித்துறை செயலாளர் திருவாட்டி சாங் லி லின் அறிக்ைக யில் தெரிவித்தார்.
பிரதமர் லீ சியன் லூங், முதன் முறையாக வெள்ளிக்கிழமையன்று பசிபிக் கூட்டணி உச்சநிலைக் கூட்டத்தில் காணொளி மூலம் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தை சிலி, கொலம்பியா, மெக்சிகோ, பெரு ஆகிய நான்கு நாடுகளும் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன.
சிலி அதிபர் ஏற்பாடு செய்த அந்த 15வது உச்சநிலைக் கூட்டத்தில் கொலம்பியா, மெக்சிகோ, பெரு நாடுகளின் தலைவர்களும் பங்கெடுத்தனர்.
சிங்கப்பூர், சிலி, மெக்சிகோ ஆகிய நாடுகள், பரந்த ஆசிய பசிபிக் பங்காளித்துவ முன்னோட்ட உடன்பாடு என்ற வேறு ஒரு தாராள வர்த்தக உடன்பாட்டில் இடம்பெற்று உள்ளன. இதனிடையே, வர்த்தக தொழில் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
"பசிபிக் கூட்டணி-சிங்கப்பூர் தாராள வர்த்தக உடன்பாடு அகலமாகக் கதவைத் திறந்துவிடும்.
"வர்த்தகம் பெருக வகை செய்யும். நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும். இந்த குறிப்பிடத்தக்க உடன்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் கணிசமான அளவுக்கு முடிவடைந்து இருப்பது எனக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது," என்று அந்த அறிக்கையில் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து இருக்கிறார். இந்தச் செய்தி வரவேற்கத்தக்க ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
லத்தின் அமெரிக்க வர்த்தக வட்டாரம் உலகின் எட்டாவது ஆகப்பெரிய பகுதியாக இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
பசிபிக் கூட்டணி அமைப்பின் இணை நாடு என்ற வகையில் வெள்ளிக்கிழமை நடந்த உச்ச நிலைக் கூட்டத்துக்கு சிங்கப்பூர் அழைக்கப்பட்டு இருந்தது.


