வர்த்தகர்களுக்காக தனியாக ஒதுக்கப்பட்ட புதிய பயணப் பாதை தொடங்கப்படும்

வர்த்தகர்களுக்காக தனியாக ஒதுக்கப்பட்ட புதிய பயணப் பாதை தொடங்கப்படும்

3 mins read
a90574d6-ace9-41b9-840a-67619793eac9
கன்னெக்ட்@சாங்கி எனும் இடத்தில் தரையிலிருந்து கூரை வரை அமைக்கப்பட்ட கண்ணாடித் தடுப்புகளால் சந்திப்பு அறை பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அறையை வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் பார்வையிட்டார். படம்: சாவ் பாவ் -

வர்த்தகர்களுக்காக தனியாக ஒதுக்கப்பட்ட புதிய பயணப் பாதையின்கீழ், எதிர்வரும் ஜனவரி மாதம் பிற்பாதியிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் குறுகியகால வர்த்தகப் பயணிகள் தங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை.

இந்தப் பயணப் பாதையைப் பயன்படுத்துவோர், விமான நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்கு வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்படுவர் என்று வர்த்தக, தொழில் அமைச்சு இன்று தெரிவித்தது. அங்கு தங்கி அவர்கள் பணிகளை மேற்கொள்வர்.

தரையிலிருந்து கூரை வரை கண்ணாடித் தடுப்புகள் அமைக்கப்பட்ட அறையில் உள்ளூர், வெளிநாட்டுத் தொழிலதிபர்களுடன் பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகளைப் பின்பற்றி அவர்கள் சந்திப்புகளை நடத்தலாம்.

வர்த்தகப் பயணிகள் தங்களது சொந்த நாடுகளில் இருந்து புறப்படுவதற்கு முன்பும் சிங்கப்பூர் வந்தவுடனும் நடத்தப்படும் கொவிட்-19 பரிசோதனை போக, அவர்கள் இங்கு தங்கியிருக்கும் காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என அடிக்கடி பரிசோதனை நடத்தப்படும்.

மேலும், கிருமிப் பரவும் அபாயத்தைக் குறைக்க தங்களுடன் பயணம் செய்த அதே குழுவுடன் மட்டுமே அவர்கள் நடமாட வேண்டும். அந்தக் குழுவில் ஐந்து பேர் வரை இடம்பெறலாம்.

வர்த்தகர்களுக்கான இந்தத் தனிப்பட்ட பயண ஏற்பாடு, ஏற்கெனவே சிங்கப்பூர் மற்ற நாடுகளுடன் கொண்டுள்ள பயண ஏற்பாடுகளுடன் மாறுபட்டது. அந்தப் பயண ஏற்பாடுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு மட்டும் பொருந்தும். அவற்றின்கீழ் சிங்கப்பூருக்கு அத்தியாவசிய பயணம் மேற்கொள்வோர் இங்கு சுதந்திரமாக நடமாடலாம்.

மாறாக, இந்தத் தனி பயண ஏற்பாடு நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் எல்லா நாடுகளில் இருந்தும் வர்த்தக, அதிகாரபூர்வப் பயணங்களுக்காக வெளிநாட்டவர்கள் இங்கு வரலாம். அவர்கள் இங்கு தங்கியிருக்கும் காலம் 14 நாட்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

இந்தப் புதிய பயண ஏற்பாடு, சாங்கி விமான நிலையத்தில் போக்குவரத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விருந்தோம்பல் துறையில் வர்த்தகம் சூடுபிடிக்க இது உதவும்.

வர்த்தகர்களுக்கான இந்தத் தனிப்பட்ட பயண ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூருக்கு வருபவர்கள் தங்க வைக்கப்படும் இடங்களில் கன்னெக்ட்@சாங்கியும் ஒன்று. வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் இன்று அந்த இடத்தைப் பார்வையிட்டார். தற்போதைய கொவிட்-19 சூழலில் சிங்கப்பூர் ஒரு வர்த்தக நடுவமாகத் திகழ இந்தப் புதிய பயண ஏற்பாடு உதவும் என்று அவர் சொன்னார்.

"பயணிகளைத் தனிமைப்படுத்தும் நடைமுறையால் உலகளவில் வர்த்தகப் பயணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கிருமிப் பரவல் என வரும்போதும், வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு அளவிலான அபாயங்களை எதிர்நோக்குகின்றன. இதனால் வர்த்தகச் சந்திப்புகளுக்குத் தடங்கல் ஏற்பட நாம் விடக்கூடாது," என்றார் அவர்.

"தனிப்பட்ட இடங்கள் ஒதுக்கப்படுவதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் வர்த்தகப் பயணிகளை சிங்கப்பூரர்கள் சந்திக்க முடியும். அதோடு, வெவ்வேறு நாடுகளில் இருந்து இங்கு வருபவர்கள் ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கவும் முடியும்," என்று அமைச்சர் சான் விவரித்தார்.

கடந்த ஆண்டிற்கான பயணப் போக்கின் அடிப்படையில், சிங்கப்பூருக்கு வந்த 10ல் ஒன்பது வர்த்தகப் பயணிகள் இங்கு ஐந்து அல்லது அதற்கும் குறைவான நாட்களே தங்கியிருந்தனர். இத்தகைய பயண முறையின்கீழ் இங்கு வரும் பயணிகள், இங்குள்ளவர்களுடன் நேரடியாக சந்திப்புகளை நடத்துவதற்கு முன்பு தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்