விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் கொவிட்-19 தொற்றை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அத்தகைய ஊழியர்கள் 54,505 பேர், ‘பிசிஆர்’ எனும் பல்படியத் தொடர்வினைச் சோதனை மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் 98,289 பேரை கிருமி தொற்றியிருந்தது ‘சீராலஜி’ சோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, விடுதிகளைச் சேர்ந்த 152,794 ஊழியர்களுக்கு ‘பிசிஆர்’ அல்லது ‘சீராலஜி’ அல்லது இவ்விரு சோதனைகள் மூலமும் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
விடுதிகளில் மொத்தம் 323,000 ஊழியர்கள் தங்கியுள்ள நிலையில் அவர்களில் 47 விழுக்காட்டினரைக் கிருமி தொற்றிவிட்டதாகச் சுகாதார அமைச்சும் மனிதவள அமைச்சும் ஒரு கூட்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளன.
மேலும் 65,000 ஊழியர்களுக்கு ‘சீராலஜி’ சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சுகள் குறிப்பிட்டன.
இப்போது ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை ‘பிசிஆர்’ சோதனை மூலம் கண்டறியலாம். கிருமித்தொற்றால் முன்னர் பாதிக்கப்பட்டதைக் கண்டறிய ‘சீராலஜி’ சோதனை உதவுகிறது.
இவ்விரு சோதனைகள் மூலமாகக் கிருமித்தொற்றியது உறுதிப்படுத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு அதற்கான அறிகுறிகளே இல்லை அல்லது இலேசான அறிகுறிகளே தென்பட்டன என்று கூறப்பட்டது.
அவர்களில் ஐவரில் ஒருவரிடம் மட்டுமே கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன எனச் சொல்லப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதவாக்கில், விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் அனைவரும் குறைந்தது ஒருமுறையேனும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கடந்த மார்ச் 25ஆம் தேதிக்குப் பிறகு, அக்டோபர் 13ஆம் தேதிதான் முதன்முறையாக விடுதிகளில் புதிதாகக் கிருமித்தொற்றுச் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை. அதன்பிறகு தொடர்ந்து இரு மாதங்களாக விடுதிகளில் கிருமி பாதிப்பு குறைவாகவே இருந்து வருகிறது என்று மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.
நவம்பர் மாதத் தொடக்க நிலவரப்படி, 98 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது வேலைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டுவிட்டனர்.
விடுதி நடத்துநர்கள், முதலாளிகள், அரசு சாரா அமைப்புகள், அனைத்து அமைப்பு பணிக்குழுவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 3,000 அதிகாரிகள், தொண்டூழியர்கள் ஆகியோர் கைகொடுத்ததால் இது சாத்தியமானது என்று டாக்டர் டான் சொன்னார்.