'சிங்கப்பூர் வேலைச் சந்தையில் காலிப் பணியிடங்கள் அதிகரித்தன'

'சிங்கப்பூர் வேலைச் சந்தையில் காலிப் பணியிடங்கள் அதிகரித்தன'

2 mins read
debc374b-a43e-4522-a855-27a4e41239aa
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இவ்வாண்டில் முதன்முறையாக கடந்த செப்டம்பர் மாதத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு ஜூன் மாதம் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 42,400 என குறைந்து போனது. இந்நிலையில், செப்டம்பரில் 49,600 காலிப் பணி இடங்கள் இருந்தன என்று மனித வள அமைச்சு இன்று வெளியிட்ட தொழிலாளர் சந்தை அறிக்கை தெரிவிக்கிறது.

இதையடுத்து, ஜூன் மாதம் 0.57 ஆக இருந்த காலிப் பணி இடங்களுக்கும் வேலை இல்லாதோருக்குமான விகிதம், செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 0.60 ஆக அதிகரித்தது.

தகவல் தொடர்பு, நிபுணத்துவ சேவைகள், சுகாதார, சமூக சேவைகள் போன்ற துறைகளில் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) பிரிவினருக்கான பணியிடங்களின் எண்ணிக்கை கூடியது.

இதனிடையே, கட்டுமானம், நிர்வாக, ஆதரவுச் சேவைகள், உற்பத்தி போன்ற 'பிஎம்இடி' சாராத் துறைகளிலும் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

மூன்றாம் காலாண்டில் பாதுகாவல், புலனாய்வு தவிர மற்ற துறைகளில் ஆள்சேர்ப்பு, பணி விலகல் விகிதங்களும் அதிகரித்ததாக அவ்வறிக்கை தெரிவித்தது.

செயல்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியதால், மூன்றாம் கால் ஆண்டில் வேலை நேரக் குறைப்பு அல்லது தற்காலிகப் பணிநீக்கத்தால் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே பாதிக்கப்பட்டனர். அவ்வகையில் 34,240 ஊழியர்கள் பாதிக்கப்பட்டதாகவும் இது இரண்டாம் காலாண்டை ஒப்புநோக்க, அதில் பாதிக்கும் குறைவு எனக் கூறப்பட்டது.

குறிப்பாக, உற்பத்தி, கட்டுமானம், உணவு, பான சேவைகள் ஆகிய துறைகளில் இந்தச் சரிவு தெளிவாகத் தெரிந்தது.

மிகைநேரப் பணிநேரம் அதிகரித்ததை அடுத்து, செப்டம்பர் மாதத்தில் சராசரியாக ஊழியர் ஒருவர் ஒரு வாரத்திற்கு 43.8 மணி நேரம் வேலை பார்த்து, ஊதியம் பெற்றார் என்றும் இது முன்பைக் காட்டிலும் 0.4 மணி நேரம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, வேலை நிறுத்த உத்தரவுகள் மீட்டுக்கொள்ளப்பட்டதை அடுத்து கட்டுமானத் துறையில் இந்த உயர்வு வெளிப்படையாகத் தெரிந்தது.

ஆயினும், பெரும்பாலான துறைகளில் வேலை நேரம் கொவிட்-19 பரவலுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது என்று அமைச்சு குறிப்பிட்டது.

தொழிலாளர் சந்தைச் செயல்பாடுகள் அதிகரித்தபோதும், இந்த வேலை நேர மேம்பாடு பல்வேறு துறைகளிலும் ஏற்ற இறக்கமாக இருந்ததாகவும் அமைச்சு கூறியது.

நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் முடிவடைந்தபின் பயனீட்டாளர் சார்ந்த துறைகளிலும் நிலைமை மேம்பட்டது. பொது நிர்வாகம், கல்வி, உணவு, பான சேவைகள், சுகாதார, சமூக சேவைகள், தகவல் தொடர்பு, நிபுணத்துவ சேவைகள் உள்ளிட்ட துறைகள் அவற்றில் சில. ஆனால், தங்குமிடம், போக்குவரத்து, கலைகள், பொழுதுபோக்கு, கேளிக்கை போன்ற சுற்றுப்பயணம் சார்ந்த துறைகள் கொரோனா நெருக்கடி காரணமாக தொடர்ந்து பாதிப்பைச் சந்தித்தன.

குறிப்புச் சொற்கள்