சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களிடையே கொவிட்-19 கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது முதல் அந்த ஊழியர்கள் மிகச் சிரமமான காலகட்டத்தைக் கடந்து இருக்கிறார்கள். என்றாலும் நம்பிக்கை, பொறுமை, ஆதரவு ஆகியவற்றைப் புலப்படுத்தி அவர்கள் சிரமமான காலகட்டத்தைச் சமாளித்து மீண்டுவர உதவி இருக்கிறார்கள் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
இதற்காக திரு லீ, வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினத்தைக் குறிக்கும் வகையில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் காணொளி மூலம் வெளியிட்ட செய்தியில் திரு லீ இவ்வாறு குறிப்பிட்டார்.
“இப்போதைய நிலைமையை எட்டுவதற்கு ஏராளமான முயற்சிகள் தேவைப்பட்டன.
“இப்போது வெளிநாட்டு ஊழியர்கள் கொவிட்-19 தொற்று இல்லாமல் உடல்நலத்துடன், பாதுகாப்பாக உள்ளனர்,” என்று திரு லீ தெரிவித்தார்.
“உங்களுடைய ஒத்துழைப்பும் தியாகமும் இல்லாமல் இந்தச் சாதனைகளை நிகழ்த்தி இருக்க முடியாது,” என்று வெளிநாட்டு ஊழியர்களுக்கு வெளியிட்ட அந்தச் செய்தியில் திரு லீ கூறினார்.
“சிங்கப்பூரர்களைப் போலவே வெளிநாட்டு ஊழியர்களும் நல்ல முறையில் கவனித்துக் கொள்ளப்படுவார்கள்,” என்று திரு லீ அவர்களுக்கு உறுதி கூறினார்.
“நீங்கள் எங்கள் சமூகத்தால் வரவேற்கப்படும் உறுப்பினர்கள். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு மருத்துவ சிகிச்சை, பராமரிப்பு உதவி கிடைப்பதை உறுதிப்படுத்துவோம். நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் தொடர்புகொண்டு இருப்பதையும் உறுதிசெய்வோம். கூடுமான வரையில் விரைவாக நீங்கள் வேலைக்குத் திரும்ப உதவுவோம்,” என்று திரு லீ அந்தச் செய்தியில் கூறினார்.
கொரோனாவை தடுப்பதற்காக நடப்பில் இருந்து வந்துள்ள கட்டுப்பாடுகள், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும் பரந்த அளவிலான சமூகத்திலும் கட்டம் கட்டமாகத் தளர்த்தப்படுவதைத் திரு லீ சுட்டினார்.
பொழுதுபோக்கு நிலையங்களுக்கு இப்போது வெளிநாட்டு ஊழியர்கள் செல்லலாம். அதோடு சமையல், விளையாட்டு போன்ற சமூக நடவடிக்கைகளிலும் அவர்கள் கலந்துகொள்ளலாம் என்று திரு லீ குறிப்பிட்டார்.
“கொவிட்-19 தொற்று மிகக் குறைவாகவே இருந்து வந்தால் மேலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியும். ஆகையால் விழிப்புடன் இருந்து அரசாங்கத்துடன், உங்கள் முதலாளியுடன் ஒத்துழைத்து ஒவ்வொருவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுங்கள்.
“சிங்கப்பூரர்கள் அனைவரின் சார்பிலும் நான் உங்களின் ஆதரவுக்கும் தொண்டுகளுக்கும் மீண்டும் நன்றி கூறுகிறேன். இந்த அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினம் உங்களுக்கு மிக மகிழ்ச்சியாக அமையட்டும் என்று வாழ்த்துகிறேன்,” என பிரதமர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
என்டியுசியின் கீழ் வரும் வெளிநாட்டு ஊழியர் நிலையம், இந்த தினத்தைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 13 முதல் 27ஆம் தேதி வரை தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது.
இத்தகைய நடவடிக்கையின் மூலம் 20,000 ஊழியர்களை எட்டி, சிங்கப்பூரர்களுக்கு ஆற்றும் தொண்டுகளுக்காக அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் இந்தக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுவதாக இந்த நிலையம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது சக ஊழியர்களுக்கு உதவும் வகையில் அடித்தள தூதர்களாகச் செயல்பட்டு பெரும் முயற்சிகளை எடுத்து வந்துள்ள 20 வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்த நிலையம் தன்னுடைய வருடாந்திர விருதுகளை வழங்கி சிறப்பிக்கும்.
கொவிட்-19 தொற்று காலகட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ அனைத்து முயற்சிகளையும் தான் எடுத்து வந்துள்ளதாக இந்த நிலையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
இந்த ஆண்டில் மட்டும் இந்த நிலையம் சாதனை அளவாக 650,000 பேருக்கும் அதிக வெளிநாட்டு ஊழியர்களை எட்டி இருக்கிறது என்று அது கூறியது.
முகக்கவசகங்கள், கைகழுவும் திரவம், சோப்பு போன்ற 5 மில்லியனுக்கும் அதிக அத்தியாவசியப் பொருட்களை இந்த நிலையம் தங்கும் விடுதிகளிலும் தற்காலிகக் குடியிருப்புகளிலும் உள்ள ஊழியர்களுக்கு விநியோகித்துள்ளது.
விடுதிகளாக மாற்றப்பட்டு உள்ள தொழிற்சாலைகளில் தங்கிஇருக்கும் சுமார் 10,000 ஊழியர்களுக்கு ஏறக்குறைய 1 மில்லியன் அளவிலான உணவுப் பொட்டலங்களை நிலையம் வழங்கியது.