அடுத்த ஆண்டில் சுமார் 17,000 பிடிஓ அடுக்குமாடி வீடுகள் விற்பனைக்கு விடப்படும். இந்த ஆண்டு விற்பனைக்கு வந்த வீடுகளைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டில் இந்த அளவுக்கு வீடுகள் சந்தைக்கு வருகின்றன.
இந்நிலையில், கொவிட்-19 காரணமாக நிச்சயமில்லாத நிலை நீடிப்பதால் வீட்டுச் சந்தையை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அணுக்கமாகக் கண்காணித்து வரும்.
தேவை இருந்தால் அதற்கேற்ப கழகம் வீடுகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் மொத்தம் 16,752 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. பொதுவாக ஓராண்டில் நான்கு முறை பிடிஓ வீடுகளை வீவக விற்பனைக்கு கொடுக்கிறது.
ஆனால் இந்த ஆண்டில் கொவிட்-19 காரணமாக மே மாதம் இடம்பெறவிருந்த வீடுகளின் விற்பனை ஒத்திப்போடப்பட்டது. ஆகஸ்ட் விற்பனையுடன் சேர்த்து அது கொடுக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு கேலாங், காலாங்/வாம்போ, தோ பாயோவில் உள்ள பிடாடாரி, குவீன்ஸ்டவுனில் உள்ள உலு பாண்டான் பேட்டை போன்ற முதிர்ச்சியடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் புதிய வீடுகள் விற்பனைக்கு வரும்.
புக்கிட் பாத்தோக், தெங்கா, உட்லண்ட்ஸ் போன்ற முதிர்ச்சியடையாத குடியிருப்புப் பேட்டைகளிலும் புதிய வீடுகள் இடம்பெறும்.
இதனால் வீடுகளை வாங்குவோருக்கு வாய்ப்புகள் பல்வேறுபட்டவையாக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

