பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதற்காக ஐந்து உணவு, பானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதவிர, 16 வேறு கடைகளுக்கும் 36 பேருக்கும் அபராதம் விதிக்கப்படும்.
கடந்த வாரயிறுதியில் அதிகாரிகள் நடத்திய அமலாக்கப் பரிசோதனையின்போது இந்தப் பாதுகாப்பு மீறல் கண்டுபிடிக்கப்பட்டதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு இன்று (டிசம்பர் 22) தெரிவித்தது.
அதிகாரிகளின் அமலாக்கப் பணிகள் அடுத்த சில வாரங்களுக்குத் தொடரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எண் 2 ஹெவ்லக் சாலையில் உள்ள ‘சியர்ஸ் அப்’ கடையை இம்மாதம் 19ஆம் தேதியிலிருந்து 10 நாட்களுக்கு மூட இம்மாதம் 18ஆம் தேதி நகர மறுசீரமைப்பு ஆணையம் உத்தரவிட்டது. இம்மாதம் 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்குப் பிறகும் வாடிக்கையாளர்கள் மதுபானம் அருந்த அந்தக் கடை அனுமதித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 18ஆம் தேதி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, இரவு 11.15 மணிக்கு வாடிக்கையாளர்கள் மதுபானம் அருந்த அந்தக் கடை அனுமதித்தது தெரிய வந்தது. அதையடுத்து, இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கி 20 நாட்களுக்கு அந்தக் கடையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்தக் கடையில் கூடுதலாக நான்கு குற்றங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
ஆர்ச்சர்ட் பகுதியில் உள்ள ‘ஒன் மின் கிளப்’ கடையும் பாதுகாப்பு நடைமுறைகளை மீறியது கண்டறியப்பட்டது. ஒரு மேசையில் எழுவர் அமரவும் மற்றொரு மேசையில் 11 பேர் அமரவும் அந்தக் கடை அனுமதித்தது. வாடிக்கையாளர்களுக்கு விளையாட்டுகளையும் அது வழங்கியது.
இம்மாதம் 20ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்கு அந்தக் கடையை மூட சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, ஆர்ச்சர்ட் பகுதியில் உள்ள ‘தேங்மன்’ கடையில் அதிகாலை 3.40 மணிக்கு வாடிக்கையாளர்கள் ‘கிரீன் டீ’ போத்தல்களில் மதுபானம் அருந்தியதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இம்மாதம் 28ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு அந்தக் கடையை மூட பயணத்துறைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
பீச் ரோட்டில் உள்ள ‘சோங் சிங் ஸ்டீம்போட்’ கடையில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு எட்டு வாடிக்கையாளர்கள் கலந்துரையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு அந்தக் கடையை மூட நகர மறுசீரமைப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ‘கியூகியூ’ கடையில் கடந்த சனிக்கிழமை இரவு 10.40 மணிக்கு வாடிக்கையாளர்கள் மதுபானம் அருந்தியதை அதிகாரிகள் கண்டறிந்தனர். ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு அந்தக் கடையை மூட ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதற்காக 16 உணவு, பானக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என அமைச்சு கூறியது.
இந்தக் கடைகளில் ஒரே குழுவில் ஐவருக்கு மேலானோர் ஒன்றாக அமரவும் குழுக்கள் ஒன்றோடு ஒன்று கலக்கவும் அனுமதிக்கப்பட்டது போன்ற பாதுகாப்பு மீறல்கள் கண்டறியப்பட்டன.
இதுபோக, உணவு, பானக் கடைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதற்காக 36 பேருக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.