சம்பள உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 95,000க்கு மேற்பட்ட சிங்கப்பூர் முதலாளிகள் இந்த ஆண்டில் $1 பில்லியன் மதிப்புள்ள சம்பள உதவித்தொகை வழங்கீடுகளைப் பெற்றுள்ளனர்.
சிங்கப்பூர் ஊழியர்களுக்குக் கூடுதல் ஊதியம் கொடுக்கும் அவர்களின் செலவுகளை ஈடுகட்ட அந்த முதலாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
அடுத்த தொகுதி வழங்கீடுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு, உள்நாட்டு வருவாய் ஆணையம் ஆகியவை நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இந்த வழங்கீடுகளுக்கு முதலாளிகள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இந்த வழங்கீடுகளுக்குத் தகுதி பெற்றவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் அது குறித்த நினைவூட்டலைப் பெறுவார்கள்.
எட்டாம் தொகுதி வழங்கீடுகளுக்கான தகுதியைப் பெற முதலாளிகள், மாதம் $5,000 வரை மொத்த சம்பளம் பெறும் தங்களின் சிங்கப்பூர் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைந்தது $50 உயர்த்தியிருக்க வேண்டும் அல்லது 2017, 2018, 2019ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஊழியர்களின் சம்பளத்தில் குறைந்தது $50 உயர்த்தப்பட்ட நிலையை முதலாளிகள் மாற்றாமல் இருந்திருக்க வேண்டும்.
தங்கள் ஊழியர்களின் இந்த ஆண்டுக்கான கட்டாய மத்திய சேம நிதிச் சந்தாவை முதலாளிகள் ஜனவரி மாதம் 14ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இந்தச் சம்பள உதவித்தொகை வழங்கீடுகள் முதலாளிகளின் வங்கிக் கணக்குகளில் 'பேநவ் கார்ப்பரெட்' அல்லது 'ஜைரோ' பரிவர்த்தனை மூலம் சேர்ப்பிக்கப்படும்.
முதலாளிகள் 'பேநவ் கார்ப்பரெட்' பரிவர்த்தனைக் கணக்கை உருவாக்க வேண்டும் அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் 'ஜைரோ' பரிவர்த்தனைக் கணக்கை உருவாக்க வேண்டும் என்று நிதி அமைச்சு, உள்நாட்டு வருவாய் ஆணையம் ஆகியவை முதலாளிகளைக் கேட்டுக்கொண்டன.
இந்த ஆண்டு இரண்டு சுற்று சம்பளத் உதவித்தொகை வழங்கீடுகள் கொடுக்கப்பட்டன.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொடுக்கப்பட்ட பிரதான வழங்கீடுகள் நீங்கலாக, முதலாளிகள் இரண்டாம் சுற்று வழங்கீடுகளை இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பெற்றுக் கொண்டனர்.
அது கொவிட்-19 நோய்ப் பரவலை எதிர்த்துப் போரிட அறிவிக்கப்பட்ட $6.4 பில்லியன் மதிப்புள்ள ஒற்றுமை வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டது.
இத்திட்டம் பற்றிய மேல் விவரங்களுக்கு, முதலாளிகள் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் இணையத் தளம் அல்லது 1800-352-4727 எனும் அதன் நேரடித் தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
பட்ஜெட் 2020ல், சம்பள உதவித்தொகை திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. வழங்கீடுகளுக்குத் தகுதி பெற, ஊழியர்களின் மாதாந்திர சம்பள வரம்பு 2019, 2020 ஆண்டுகளில் $4,000லிருந்து $5,000க்கு உயர்த்தப்பட்டது.
அரசாங்கத்தில் நிதி ஆதரவு முறையே 2019ல் 20%ம், 2020ல் 15% என்று உயர்த்தப்பட்டது.

