டிரேஸ்டுகெதர் சாதனம் வழி ஒருவரின் தடங்களைக் கண்டறியும் திட்டத்தில் சிங்கப்பூரில் வாழும் 70 விழுக்காட்டினர் பங்கேற்றுள்ளனர்.
இந்தத் திட்டத்தில் இந்த அளவு பொதுமக்கள் பங்கேற்பு இருந்தால்தான் மூன்றாம் கட்டத் தளர்வுகளை நோக்கி சிங்கப்பூர் காலடி எடுத்து வைக்க முடியும் என அரசாங்கம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த டிரேஸ்டுகெதர் சாதனம் அனைவருக்கும் கிடைத்தால் அல்லது கைபேசியில் இந்த செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்தால் மட்டுமே 'டிரேஸ்டுகெதர் ஒன்லி' பாதுகாப்பான நுழைவு திட்டம் திரையரங்குகள், வளாகங்கள் போன்ற இடங்களில் செயல்படுத்தப்படும் என்று அறிவார்ந்த தேசத் திட்டத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று விளக்கினார்.
திங்கட்கிழமை நிலவரப்படி சிங்கப்பூரில் 70 விழுக்காட்டினர் இந்த சாதனத்தை வைத்துள்ளனர் அல்லது இதை கைபேசி செயலியாக பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.
“டிரேஸ்டுகெதர் எனப்படும் தடங்களைக் கண்டறியும் திட்டத்தில் 70 விழுக்காடு சிங்கப்பூரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் அல்லது இதற்கான சாதனத்தை செயல்பாட்டில் வைத்துள்ளனர்.
“அத்துடன், செப்டம்பர் 14ஆம் தேதி டிரேஸ்டுகெதர் சாதனத்தை விநியோகம் செய்யத் தொடங்கியதிலிருந்து இதுவரை 1.75 மில்லியன் சாதனங்களை விநியோகம் செய்துள்ளோம்.
"இது குறிப்பிடத்தக்க எண்ணிக்கை. இந்த அளவுக்கு சிங்கப்பூரர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று வெளியுறவு அமைச்சருமான விவியன் பாலகிருஷ்ணன், கம்போங் கெம்பாங்கான் சமூக மன்றத்தில் இந்த சாதனத்தை வழங்கும் நிகழ்ச்சியில் பேசியபோது கூறினார்.
கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி கொவிட்-19 நோய்க்கு எதிராக சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுகள் நிலைக் குழுவிற்கு கூட்டுத் தலைமை வகிக்கும் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங், மூன்றாம் கட்டத் தளர்வுகளை நோக்கி சிங்கப்பூர் செல்லுமுன் டிரேஸ்டுகெதர் திட்டத்தில் 70 விழுக்காடு பங்கேற்பு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.