சிங்கப்பூரில் 70, அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 60 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வயதுகளில் இருப்போருக்கு நோய் தொற்றினால் அவர்கள் எளிதில் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் சாத்தியம் இருப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
சுகாதார பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கும் கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு பணிபுரியும் முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
வரும் புதன்கிழமை (டிசம்பர் 30) முதல் தேசிய தொற்று நோய்கள் நிலையத்தின் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என சுகாதார அமைச்சு இன்று (டிசம்பர் 27) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
அடுத்தடுத்த வாரங்களில் மற்ற சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களுக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சு, பொது சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களும் தனியார் மருத்துவமனைகளும் தங்களது ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதன் தொடர்பில் ஏற்பாடுகளைச் செய்யும் என்றார்.
பிப்ரவரி மாதத்திலிருந்து வயதானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும். அவர்களைத் தொடர்ந்து மருத்துவ ரீதியாகத் தகுதிபெறும் மற்ற சிங்கப்பூரர்களுக்கும் இங்கு நீண்ட காலம் வசிப்போருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றது சுகாதார அமைச்சு.
கடந்த வியாழக்கிழமையன்று 14 உறுப்பினர் நிபுணர் குழு சமர்ப்பித்த பரிந்துரைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொண்டதை அடுத்து, தடுப்பூசி போடும் நடைமுறை பற்றிய அறிவிப்பு வெளியானது.
தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கொவிட்-19 தொற்றுப் பரவல் உடனடியாகத் தீர்ந்துவிடாது என்றும், தொடர்ந்து பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் எனவும் அமைச்சு குறிப்பிட்டது.
இதன் தொடர்பிலான கூடுதல் செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (டிசம்பர் 28) அச்சுப் பிரதியை நாடவும்!