சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி போடும் பணி தொடங்கியது; மூத்த தாதி ஒருவருக்கு முதல் தடுப்பூசி

சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி போடும் பணி தொடங்கியது; மூத்த தாதி ஒருவருக்கு முதல் தடுப்பூசி

2 mins read
95bccca6-8839-46b3-8522-69d1bfedbc89
தேசிய தொற்று நோய்கள் நிலையத்தில் மூத்த தாதியாகப் பணிபுரியும் 46 வயதான திருவாட்டி சாரா லிம் தான் சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

சிங்கப்பூரில் இன்று (டிசம்பர் 30) காலை கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

தேசிய தொற்று நோய்கள் நிலையத்தின் மூத்த தாதி ஒருவர்தான் இங்கு ஃபைசர் -பையோஎன்டெக் தடுப்பூசியை போட்டுக்கொண்ட முதல் நபர்.

46 வயதான திருவாட்டி சாரா லிம் எனும் அந்தத் தாதி, கொவிட்-19 பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகப்படுபவர்களுக்கு பரிசோதனை செய்யும் குழுவில் இருக்கிறார்.

"சிங்கப்பூரிலேயே முதல் நபராக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதில் மகிழ்ச்சி; நன்றி," என்று குறிப்பிட்ட அம்மாது, தடுப்பூசி போட்டுக்கொள்ள மற்றவர்களையும் ஊக்குவிக்க இருப்பதாகச் சொன்னார்.

அவ்வளவாக வலி இல்லை என்று கூறிய அவர், தடுப்பூசி போட்டுக்கொண்டது தமக்கு மிகுந்த மன அமைதியைக் கொடுப்பதாகக் கூறினார்.

"என்னை, எனது அன்புக்குரியவர்களை, நோயாளிகளை மற்றும் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு தடுப்பூசி போட விரும்பினேன்," என்றார் அவர்.

"கொவிட்-19க்கு எதிரான போரில் தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியம்," என்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட பிரதமர் லீ சியன் லூங், "இந்தப் புயல் அடங்க இன்னும் சிறிது காலம் பிடிக்கும்," என்றார்.

திருவாட்டி சாரா லிம்முக்கு மூத்த தாதி கோ வெய் லியன், 26, தடுப்பூசியைப் போட்டார். இன்று காலை 8.30 மணிக்கு குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மருந்து வெளியில் எடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து, அதாவது மருந்து அறை வெப்பநிலைக்கு வந்த பிறகு சாராவுக்கு ஊசி போடப்பட்டது.

இரண்டாவதாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர் டாக்டர் காளீஸ்வர் மாரிமுத்து எனும் 43 வயது மூத்த ஆலோசகர். கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள், கொவிட்-19 நோயாளிகள் போன்றவர்களை நிர்வகிக்கிறார் அவர்.

"நீண்ட பயணத்துக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறோம். நம் அனைவருக்கும் இது மிகவும் சிரமமாக இருந்தது," என்று கூறிய மருத்துவர், "தடுப்பூசி போட்டுக்கொண்டதும் அதிக பாதுகாப்பாக உணர்கிறேன். தடுப்பூசிதான் நமக்கான இறுதி அடுக்கு பாதுகாப்பென நம்புகிறேன்," என்றார்.

இன்று காலை சுமார் 30 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது.

மற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு படிப்படியாக தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு முறை ஊசி போடுவதற்கான தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள திரு கோவுக்கு சுமார் 2 நிமிடங்கள் தேவைப்பட்டன.

ஊசி போட்டுக்கொண்ட சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் கண்காணிப்பு அறையில் 30 நிமிடங்களுக்கு அமர வைக்கப்பட்டனர்.

இந்தத் தடுப்பூசியில் 2 டோஸ்கள் 21 நாட்கள் இடைவெளியில் கொடுக்கப்பட வேண்டும். இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அடுத்த டோஸ் ஜனவரி 20ஆம் தேதி வழங்கப்படும்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பு தடுப்பூசி போட்டுக்கொள்பவரின் தகவல்கள் பெறப்படுவதுடன் அவர்களது ஒப்புதலும் பெறப்படும்.

குறிப்புச் சொற்கள்