கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் ரத்தாகிவிட்டது. மலேசியா தெரிவித்து இருந்த மாற்றங்களின் தொடர்பில் டிசம்பர் 31க்குள் உடன்பாடு ஏற்படவில்லை. இதன் காரணமாக அந்தத் திட்டம் முடித்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினும் கூட்டு அறிக்கை ஒன்றில் இன்று இதனை அறிவித்தனர்.
கொவிட்-19 காரணமாக மலேசியப் பொருளியலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, இந்த அதிவேக ரயில் திட்டத்தில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது என்று மலேசிய அரசாங்கம் குறிப்பிட்டு இருந்தது என்பதை அந்தக் கூட்டறிக்கைச் சுட்டியது.
அந்த மாற்றங்களின் தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை இரண்டு அரசாங்கங்களும் நடத்தி வந்தன. ஆனால் உடன்பாட்டை எட்ட முடியவில்லை.
ஆகையால் கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்ட உடன்பாடு 2020 டிசம்பர் 31ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இதனையடுத்து இரு நாடுகளும் தங்களுக்குரிய கடப்பாடுகளை நிறைவேற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்ட இரு தரப்பு இணக்கம் முடிவுக்கு வர மலேசியா அனுமதித்துவிட்டது என்றும் இந்தத் திட்ட இணக்கத்திற்கேற்ப சிங்கப்பூர் ஏற்கெனவே செலவிட்டு உள்ள தொகையை மலேசியா ஈடுசெய்ய வேண்டி இருக்கும் என்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அதிவேக ரயில் திட்டம் ரத்தாகி இருந்தாலும் இரு நாடுகளும் தொடர்ந்து நல்லுறவை நிலைநாட்டி வரவும் இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட தொடர்புகளைப் பலப்படுத்துவது உள்ளிட்ட பல துறைகளிலும் அணுக்கமாக ஒத்துழைக்கவும் உறுதிபூண்டு இருப்பதாக கூட்டறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூருக்கு மலேசியா கொடுக்க வேண்டி இருக்கின்ற இழப்பீட்டுத் தொகை பற்றிய விவரங்கள் கூட்டறிக்கையில் இடம்பெறவில்லை.
இந்த ரயில் திட்டத்தின் தொடர்பில் சிங்கப்பூர் 2018 மே மாத முடிவு வாக்கில் $250 மில்லியனுக்கும் அதிகத் தொகையைச் செலவிட்டுள்ளது என்று அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்த திரு கோ பூன் வான் தெரிவித்து இருந்தார்.
சிங்கப்பூர் செலவிடும் தொகை இன்னும் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.


