மத்திய சேம நிதியின் ஓய்வுக்கால கணக்கில் பணம் நிரப்பும் திட்டத்தின் கீழ் மொத்தம் 440,000 பேர் பயன்பெறுவர்.
இவ்வாண்டு நடப்புக்கு வரும் இந்தப் புதிய திட்டத்தின்படி, இவர்கள் தங்கள் ஓய்வுக்கால கணக்கில் ஆண்டொன்றுக்கு $600 வரை பண நிரப்புதலைப் பெறலாம் என்று கூறப்படுகிறது.
இவர்களில் கிட்டத்தட்ட 53 விழுக்காட்டினர் 55 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று மத்திய சேம நிதிக் கழகம் நேற்றுத் தெரிவித்தது.
‘மேட்ச்டு ரிட்டையர்மண்ட் சேவிங்ஸ் ஸ்கீம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்டது. மத்திய சேம நிதிக் கழக முதிய உறுப்பினர்கள் தங்கள் ஓய்வுக்கால கணக்கில் குறைந்தபட்ச ஓய்வுக்கால நிதியைப் பெற்றிருக்க உதவி புரியும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஒருவரின் சேம நிதி ஓய்வுக்கால கணக்கில் அவரது குடும்ப உறுப்பினர்களோ, முதலாளிகளோ, அல்லது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரோ பணம் நிரப்பலாம்.
இதில் நிரப்பப்படும் ஒவ்வொரு வெள்ளிக்கும் ஈடாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, ஆண்டொன்றுக்கு $600 என்ற வரம்பிற்கு உட்பட்டு, அரசாங்கமும் பணம் நிரப்பும்.
இந்தப் பணம் நிரப்புதல் மசேநி கழகத்தின் இணையத்தளம் மூலமாகவோ, கைபேசி செயலி மூலமாகவோ ஒருவர் செய்யலாம்.
மேலும், பணம் நிரப்பும்போது மொத்தமாக ஒரு தொகையைப் போட வேண்டுமென்பதில்லை. ஜைரோ மூலமாக அவ்வப்போது சிறு சிறு தொகையாக ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட தொகை ஒன்றை நிரப்பினாலும் அதற்கேற்றவாறு அரசாங்கம் நிரப்பும் தொகையைப் ெபற்றுக்கொள்ளலாம்.
“55 வயதை எட்டிய மத்திய சேம நிதிக் கழக உறுப்பினர்களில் பாதிப் பேரிடம் இன்னமும் குறைந்தபட்ச ஓய்வுக்கால நிதி இல்லை. அரசாங்கத்தின் இந்தப் பணம் நிரப்பும் திட்டம் பலர் தங்களது சேம நிதிக் கணக்கில் பணம் சேமிக்க ஊக்குவிக்கும்,” என்று கழகத்தின் தலைமை நிர்வாகி ஆகஸ்டின் லீ கூறினார்.
“சேமிப்புகளுக்கு சேம நிதிக் கழகம் வழங்கக்கூடிய வட்டி விகிதத்தைக் காட்டிலும் நல்ல வட்டி விகிதம் வேறெங்கும் கிடைக்காது. முதியவர்களின் அன்புக்குரியவர்களும் பரந்த சமூகத்தின் உறுப்பினர்களும் சேம நிதிக் கழக உறுப்பினர்களின் ஓய்வுக்கால தேவையைப் பூர்த்தி செய்ய உதவுவர் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
“சிறுசிறு தொகையாக தொடர்ந்து நிரப்பினாலும் அது இவர்களின் ஓய்வுக்காலத் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவும்,” என்றார் அவர்.
இந்தத் திட்டத்தில் பங்குபெற ஒருவர் 55 வயதிலிருந்து 70 வயதுக்கு உட்பட்டவராகவும் அவரது ஓய்வுக்காலக் கணக்கில் குறைந்தபட்ச அளவான 93,000 வெள்ளிக்குக் குறைவாகவும் இருப்பது அவசியம்.