அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடனை அமெரிக்க நாடாளுமன்றம் இன்று அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது.
தேர்தலுக்குப் பிறகு, கடந்த 2 மாதங்களாக அவரது வெற்றியை ஒப்புக்கொள்ள அதிபர் டோனல்ட் டிரம்ப் மறுத்து வந்த நிலையில், நேற்று அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.
அமளி ஒடுங்கிய பிறகு இன்று மீண்டும் கூடிய நாடாளுமன்றம் மற்றும் செனட் உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திரு ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்தனர்.
இதற்கிடையே, அதிகார மாற்றத்தை சுமுகமாக நடத்த அதிபர் டிரம்ப் இன்று உறுதி அளித்துள்ளார்.
“தேர்தல் முடிவை நான் ஏற்றுக்கொள்ளாதபோதும், ஜனவரி 20ஆம் தேதி அதிகார மாற்றம் சுமுகமாக இருக்கும்,” என்று அவர் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளார் டான் ஸ்கேவினோ டுவிட்டரில் பதிவிட்டார்.
தேர்தல் சபை வாக்குகளின் முடிவை இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் துணை அதிபர் மைக் பென்ஸ். திரு பைடன் 306 வாக்குகளைப் பெற்றதாக அறிவித்தார்.
போதிய வாக்குகளைப் பெற்றதையடுத்து, வரும் 20ஆம் தேதி அதிபராக திரு பைடனும் துணை அதிபராக திருவாட்டி கமலா ஹாரிசும் பதவி ஏற்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதிக் கட்ட நடவடிக்கையான தேர்தல் சபை வாக்குப் பதிவு நிகழ்ந்தபோது, நாடாளுமன்றத்தில் நேற்று நிகழ்ந்த வன்முறைக்கு அதிபர் டிரம்ப் தான் காரணம் என ஜனநாயக் கட்சியின் செனட் தலைவர் சுக் ஷுமர் கூறினார்.