சிங்கப்பூர் தனது எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதன் விளைவாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் இம்மாதம் 10ஆம் தேதி வரை 26 நாட்களில் 30 வெவ்வேறு நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 562 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று கூறும் அறிவியலாளர்கள், உலக அளவில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தாலும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் கடுமையான பரிசோதனை முறைகளால் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, தேவைப்பட்டால் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாக்கப்படுகிறார்கள் என்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாள்தோறும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடம் ஓரிலக்க எண்ணிக்கையிலான அதாவது பத்துக்குக் குறைவான சம்பவங்கள் பதிவாகின.
புருணை, சீனா, நியூசிலாந்து, வியட்னாம், ஆஸ்திரேலியா, தைவான் ஆகிய நாடுகளின் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து தளர்த்தியது. அத்துடன், வர்த்தகங்கள் எதிர்நோக்கும் மனிதவளப் பற்றாக்குறைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் புதிய வேலை அனுமதிச் சீட்டு, எஸ்-பாஸ் என அனைத்துத் துறைகளுக்கான விண்ணப்பங்களுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.
"உலக அளவில் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில் அந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளிடமும் கிருமித்தொற்று அறிகுறிகள் இருப்பது இயல்புதான்," என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லி கொங் சியான் மருத்துவப் பள்ளியின் இணைப் பேராசிரியர் ஜோசிப் கார்.
"அதிக பாதிப்புக்குள்ளாகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் சிங்கப்பூருக்கு வந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும்போது மேற்கொள்ளும்போது, கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்படும். நவம்பர் 15ஆம் தேதியன்று 14,805 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். டிசம்பர் 15ஆம் தேதி அந்த எண்ணிக்கை 16,695க்கு உயர்ந்தது," என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேரா சிரியர் டேல் ஃபிஷர்.
"வெளிநாட்டுப் பயணிகளிடம் கிருமித்தொற்று விரைவாகக் கண்டுபிடிக்கப்படுவதும் உள்ளூரில் சமூக அளவில் அது குறைவாக இருப்பதும் நமது கட்டுப்பாடுகள் நல்ல பலன் அளிப்பதைக் காட்டு கிறது," என்றும் கூறினார் பேரா சிரியர் ஃபிஷர்.

