ஒவ்வொரு நாளும் அதிகமானவர்களுக்குத் தடுப்பூசி போடும் வகையில் கொவிட்-19 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும் என்றும் பலதுறை மருந்தகங்களிலும் பொது மருந்தகங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும் என்றும் சிங்கப்பூரின் தலைமைச் சுகாதார அறிவியல் நிபுணர் டான் சோர் சுவான் தெரிவித்துள்ளார்.
பலதுறை மருந்தகங்களிலும் பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களிலும் (பிஎச்பிசி) பொது மருந்தகங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும் போது, அது சிங்கப்பூரர்களுக்கு வசதியாகவும் சௌகரியமானதாகவும் இருக்கும் என்று பேராசிரியர் டான் கூறினார்.
அவருடன் சேர்த்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகச் சுகாதாரக் குழுமத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 120 பேருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் இடம்பெற்ற அந்தத் தடுப்பூசி நடவடிக்கையில், கொவிட்-19 தடுப்பூசி நிபுணர் குழுவின் தலைவரான இணைப் பேராசிரியர் பெஞ்சமின் ஓங் முதலாமவராகத் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்பூசி போடும்போது கிட்டத்தட்ட வலியே தெரியாது என்று சொன்ன பேராசிரியர் ஓங், சில வாரங்களுக்கு முன்புதான் சளிக்காய்ச்சல் தடுப்பூசியும் போட்டுக்கொண்டார்.
சளிக்காய்ச்சல், கொவிட்-19 தடுப்பூசிகளை ஒன்றாக எடுத்துக் கொள்ளாமல் சில வார இடைவெளியில் அவ்விரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளும்படி சிங்கப்பூரர்களுக்கு பேராசிரியர் ஓங் ஆலோசனை கூறியுள்ளார். அவ்வாறு செய்வது, அந்தந்த தடுப்பூசிக்கு ஏற்றபடி நமது நோயெதிர்ப்பு மண்டலத்தைச் செயல்பட அனுமதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எவ்வாறு இருக்கின்றனர் எனக் கேட்டதற்கு, “தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் தொகுதியினரில் சிலர் எங்களது நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள். முதலாவதாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்மணியிடம் நான் பேசினேன். அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்,” என்று அவர் பதிலளித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பின் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால் அது குறித்து தடுப்பூசி மையங்களிலும் மருத்துவர்களிடமும் சுகாதார அறிவியல் ஆணையத்திடமும் சிங்கப்பூரர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று பேராசிரியர் டான் தெரிவித்தார்.
அந்தத் தரவுகள் மைய அளவில் தொகுக்கப்படும் என்றும் அதன்மூலம் உள்ளூர் மக்களிடம் ஏற்படும் பக்கவிளைவு குறித்து அதிகாரிகள் ஆராய இயலும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசியை 21 நாள்கள் இடைவெளியில் இருமுறை போட்டுக்கொள்ள வேண்டும். அப்படியிருக்க, முதல்முறை போட்டபின் வலி, காய்ச்சல் என ஏதேனும் இலேசான பக்கவிளைவுகள் ஏற்படும் பட்சத்தில் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதைத் தவிர்த்துவிட வேண்டாம் என்றும் பேராசிரியர் டான் பொதுமக்களை வலியுறுத்தி இருக்கிறார்.