நிறுவனத்தில் வேலைபார்த்த வெளிநாட்டு ஊழியர்கள் எழுவருக்குச் சம்பளத்தைக் குறைத்துக் கொடுத்ததன் தொடர்பில் சிங்கப்பூரின் ‘டுவெல்வ் கப்கேக்ஸ்’ நிறுவனத்துக்கு $119,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த எழுவரில் ஓர் ஊழியருக்குச் சில சமயம் அவருக்குரிய ஊதியத்தில் பாதி மட்டுமே கிடைத்தது என்றும் கூறப்பட்டது.
ஊழியர்களுக்கு 2017, 2018 ஆண்டுகளில் சம்பளத்தைக் குறைத்துத் தந்ததாக சென்ற ஆண்டு அந்நிறுவனத்தின் மீது 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் இது குற்றமாகும்.
‘டுவெல்வ் கப்கேக்ஸ்’ கடையை 45 வயது வானொலி படைப்பாளர் டேனியல் ஓங் மிக் யூ மற்றும் முன்னாள் மாடல் அழகி ஜேமி டியோ சாய் லின் ஆகிய இருவரும் 2011ஆம் ஆண்டில் நிறுவினார்கள்.
ஐந்து ஆண்டுகள் கழித்து அதனை $2.5 மில்லியனுக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த ‘துன்சேரி குரூப்’ வாங்கியது.
ஓங்கும் டியோவும் கடையை விற்ற பின்னர் குற்றங்கள் நடந்தன. இருப்பினும் விவாகரத்தான அவ்விருவர் மீதும் தற்போது அதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தங்களின் வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சேரவேண்டிய சம்பளம், நிறுவனத்திடமிருந்து முழுமையாகக் கிடைக்காமல் செய்ததை இருவரும் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இது 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நடந்துள்ளது.
ஒரு சில ஊழியர்களுக்கு 2012க்கும் 2013க்கும் இடைப்பட்ட காலத்தில் சம்பளமே கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பள விவகாரத்தில் தொடர்புடைய ஏழு ஊழியர்களும் குற்றம் நடந்ததாகக் கூறப்படும் சமயத்தில் ‘எஸ்-பாஸ்’ வேலை அனுமதி வைத்திருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. நிறுவனத்தில் அவர்கள் இன்னமும் பணிபுரிகிறார்களா என்பது குறித்து அறியப்படவில்லை.