மலேசியாவிலிருந்து உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்கு வரும் சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு நாளை (ஜனவரி 22) முதல் கட்டாய கொவிட்-19 ஏஆர்டி எனப்படும் ஆன்டிஜென் விரைவு பரிசோதனை நடத்தப்படும் என்று வர்த்தக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தத் தரை வழி சோதனைச் சாவடிகளுக்கு வாகனம் ஓட்டி வருவோருக்கும் உடன் வருவோருக்கும் படிப்படியாக நாளை முதல் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
பரிசோதனையில் தொற்று இல்லை என்பது தெரியவந்தால் சிங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து இங்கு வருவோரிடம் தொற்று காணப்படும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன.
இதனால் சிங்கப்பூர் எல்லைகளில் கட்டுபாடுகளைக் கடுமையாக்குகிறது. சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் எல்லாரும் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
சரக்கு வாகனங்களை ஓட்டி வருவோரும் அவர்களுடன் வருவோரும் இங்கு மக்களுடன் கலந்துறவாட வாய்ப்புகள் உண்டு என்பதால் எல்லையில் பரிசோதனைகளை நடத்தி அதன் மூலம் கிருமி பரவாமல் தடுக்கலாம்.
சிங்கப்பூர், மலேசியா இரண்டு நாடுகளுக்கும் இடையில் சரக்குகள் சரளமாகச் சென்று வர வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சு அங்கீகரிக்கிறது.
அதேபோல் சரக்கு வாகன ஓட்டுநர்களும் மற்றவர்களும் ஆற்றும் முக்கிய பணியையும் அது அங்கீகரிக்கிறது. ஆகையால் எல்லையில் சரளமாக சரக்குகள் வந்து செல்வதை தான் உறுதிப்படுத்தப்போவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
சரக்கு வரத்தை எதிர்பார்த்து இருக்கும் நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்து நிறுவனங்களுடன் அணுக்கமாக தகவல் தொடர்பைக் கட்டிக்காத்து சரக்கு தாமதத்துக்கும் வாய்ப்பு உண்டு என்பதை மனதில் கொள்ளவேண்டும் என்று அமைச்சு கூறியது.
சிங்கப்பூரில் ஏஆர்டி பரிசோதனை பெரிய அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக நடத்தப்பட்டு வந்துள்ளது.
அந்தச் சோதனை மூலம் சுமார் 30 நிமிடங்களில் முடிவைத் தெரிந்துகொள்ளலாம். சுகாதார அமைச்சு சென்ற வாரம் ஓர் அறிவிப்பை விடுத்தது. ஜனவரி 24 இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்குத் திரும்பும் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படவேண்டும் என்றது அமைச்சு.