சிங்கப்பூரில் இருக்கும் அனைவருக்கும் தடுப்பூசி போட்ட பிறகும்கூட அனைத்துலக அளவிலான வெளிநாட்டுப் பயணங்கள் உடனடியாக பழைய நிலைக்குத் திரும்பாது எனவும் அது உலக அளவிலான கொவிட்-19 சூழலைப் பொறுத்தது எனவும் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் குறிப்பிட்டார்.
அவ்வாறு பயணங்கள் வழக்கநிலைக்குத் திரும்பும்போது அது படிப்படியாகவும் இருதரப்பு ஏற்பாடுகள் மூலமாகவும் செயற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். பின்னர் அவை வட்டார ஏற்பாடுகளாக விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கல்வி அமைச்சரும் கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
கடந்த இரு வாரங்களாக சமூகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவதால், கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமா என்பது குறித்து மிகக் கவனமாக ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று சிங்கப்பூரில் பரவத் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி அமைச்சர் வோங்கும் பணிக்குழுவின் இன்னோர் இணைத் தலைவரும் சுகாதார அமைச்சருமான கான் கிம் யோங் கடந்த செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர்.
அந்த ஒன்றரை மணி நேர நேர்காணலின்போது, கடந்த 12 மாதங்களில் பணிக்குழு எதிர்கொண்ட சவால்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் பேசினர்.
அப்போது கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் பங்காற்றிய, உதவிய முன்களப் பணியாளர்கள், தொண்டூழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அமைச்சர்கள் இருவரும் நன்றி தெரிவித்தனர்.
உலகின் பல நாடுகளிலும் கொரோனா பரவல் இருப்பதால் நிலைமை இன்னும் கணிக்க முடியாத ஒன்றாகவே நீடிக்கிறது என்றும் சிங்கப்பூர் இன்னும் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக திரு வோங் சொன்னார்.
சிங்கப்பூரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தோற்கடிக்கப்பட முடியாதவை அல்ல என்றும் அவர் சொன்னார்.