சீனப் புத்தாண்டுக்கு முன்பாக கொவிட்-19 தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அதைத் தடுப்பதற்காக கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இது மக்களுக்கு ஏமாற்றமாக இருக்கக்கூடும். ஆனால் சிங்கப்பூர் தொடர்ந்து விழிப்புநிலையில் இருந்து வர வேண்டும் என்றும் கொண்டாட்ட காலத்தை வேறுபட்ட முறையில் கொண்டாடி மகிழ்வதற்கு ஏற்ப மனோவியல் ரீதியில் சிங்கப்பூர் தயாராக வேண்டும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரையும் பாதுகாப்பதற்காக நடப்புக்கு வந்துள்ள கடுமையான நடவடிக்கைகளை அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் எடுத்துக் கூறி இருக்கிறார்.
சீனப் புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாடலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைவருக்கும் கடுமையான நடவடிக்கைகள் ஏமாற்றமாகவே இருக்கும் என்பதை தான் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் கூறினார்.
“இருந்தாலும் இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை வேறுபட்ட முறையில் கொண்டாடி மகிழ்வதற்கு மனோவியல் ரீதியில் நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
“பக்கத்து நாடுகளைப் பாருங்கள். அங்கு கிருமித்தொற்று மீண்டும் அதிகரிக்கிறது.
“கடுமையான கட்டுப்பாடுகள் நமக்கு ஏன் தேவை என்பது அதன் மூலம் நமக்குத் தெரியவரும்,” என்று அவர் தெரிவித்து உள்ளார்.
கொவிட்-19 தொற்று அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
கொவிட்-19க்கு எதிரான போராட்டம் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை என்பதையே அண்மைய சமூகத் தொற்று நிலவரங்கள் நினைவூட்டுவதாகவும் திரு லீ சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூர் முதலாவது கொவிட்-19 தொற்றைச் சந்தித்து ஓராண்டு காலம் ஆகிவிட்டது. இந்த நிலையிலும் சமூகத்தொற்று இன்னமும் ஒடுங்கியபாடில்லை.
‘‘நாம் ஒரு போதும் சந்தித்திராத குழப்பங்கள், வாழ்க்கை இடையூறுகள், பிரச்சினைகள் பலவற்றையும் சென்ற ஆண்டு நாம் சந்தித்தோம்.
‘‘தீவிரமான இடைவிடாத முயற்சிகள், தியாகங்கள் மூலமாக ஒரு நிலையான கட்டத்தை நாம் எட்டி இருக்கிறோம்,” என்று தெரிவித்த திரு லீ, சிங்கப்பூரின் தடுப்பூசி செயல்திட்டம் இடம்பெற்று வருவதையும் 70 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள
முதியவர்களுக்கு ஜனவரி 27 முதல் தடுப்பூசி போடும் இயக்கம் தொடங்கும் என்பதையும் சுட்டினார்.
“கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறாமல் நடந்து நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் தொடர்ந்து பாதுகாப்போம்,’’ என்று திரு லீ தமது செய்தியில் அறைகூவல் விடுத்து இருக்கிறார்.