உலகில் கொவிட்-19 நோய்ப் பரவல் முடிவிற்கு வர இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் ஆகலாம் என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
இடைப்பட்ட காலத்தில், கொரோனா பரவலைக் கையாள்வதில் உலகம் இன்னும் பல இடையூறுகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்று அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.
“கொரோனா தடுப்பூசிகள் வந்துவிட்டதால் படிப்படியாக அனைத்துலகப் பயணத்தைத் தொடங்க முடியும் என்றாலும், உலகம் முழுவதும் தடுப்பூசி போடுவது அவ்வளவு விரைவாகவும் எளிதாகவும் நடந்துவிடாது. அதனால் இவ்வாண்டிலும் ஒருவேளை அடுத்த ஆண்டின் குறிப்பிட்ட காலத்திலும் பெரும் மாற்றத்திற்கு உள்ளான உலகில் வாழ்வதற்கு சிங்கப்பூரர்கள் தயாராக இருக்க வேண்டும்,” என்று, கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங் கூறிஇருக்கிறார்.
கொள்கை ஆய்வுக் கழகம் நேற்று ஏற்பாடு செய்திருந்த ‘சிங்கப்பூர் கண்ணோட்ட மாநாட்டில்’ கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு பேசினார்.
முகக்கவசம் அணிவது, பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்வது, கூட்டம் அதிகமுள்ள இடங்களைத் தவிர்ப்பது போன்றவை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகத் தொடரும் என்று அமைச்சர் வோங் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவில் தோன்றிய உருமாற்றக் கிருமியை எதிர்த்துச் செயல்படும் திறனை இப்போதைய தடுப்பூசிகள் கொண்டிராமல் போகலாம் என்று முதற்கட்ட ஆய்வு முடிவுகள் காட்டுவதை ஓர் இடையூறாக அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், கொரோனா கிருமியின் எல்லாவிதமான திரிபுகளுக்கு எதிராகவும் செயல்படக்கூடிய ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படலாம் என்றும் அவர் சொன்னார்.
மாறாக, சளிக்காய்ச்சல் தடுப்பூசி போல, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய வகை தடுப்பூசிகளும் உருவாக்கப்படலாம் என்றும் திரு வோங் கூறினார்.
“பகிர்ந்த உலகில் நாம் வாழ்கிறோம் என்பதும் எல்லாரும் பாதுகாப்பாக இருக்கும் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்பதுமே இதிலிருக்கும் அடிப்படைச் செய்தி,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சில நேர்மறையான மாற்றங்கள் தோன்றலாம் என்றாலும், கொரோனா தொற்றுக்குப் பிந்தைய உலகம் இப்படித்தான் இருக்கும் என எவராலும் கூற முடியாது என்றார் அவர்.
1918 சளிக்காய்ச்சல் பரவலுக்குப் பின் வெற்றிலைப் படிக்கம் பயன்படுத்துவதும் பொது இடங்களில் எச்சில் துப்புவதும் சுகாதாரமற்ற பழக்கங்களாகப் பார்க்கப்பட்டதை அமைச்சர் வோங் சுட்டினார்.
அதுபோல, சிங்கப்பூரிலும் சுகாதாரப் பழக்கங்கள் குறித்தும் சமூகப் பொறுப்பு குறித்தும் கொரோனா பரவல் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட திரு வோங், கைகுலுக்குவது போன்ற சில பழக்கவழக்கங்கள் ஒழிந்தே போகலாம் என்றும் சொன்னார்.
ஒவ்வொரு முறை நோய்ப் பரவலின்போதும் ‘தொற்று அபாயத்தைக் குறைக்க புதுவகையில் முகமன் கூறுவோம்’ என்ற குரல்கள் எழும் என்ற அமைச்சர், சிங்கப்பூரில் 2003 சார்ஸ் பரவலின்போதும் அது நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டார்.