சிங்கப்பூரில் உள்ள 24 வட்டாரங்களிலும் தலா ஒரு சமூகத் தடுப்பூசி மையம் இவ்வாண்டு மார்ச் மாதத்துக்குள் அமைக்கப்படவுள்ளது.
சிங்கப்பூருக்கு கூடுதல் தடுப்பூசிகள் வந்து சேர்ந்ததும் விரைவில் பொதுமக்களுக்கு, குறிப்பாக மூத்தவர்களுக்கு, தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய முடியும் என வர்த்தக, தொழில்துறை அமைச்சர் சான் சுன் சிங் இன்று (ஜனவரி 26) தஞ்சோங் பகார் சமூக மன்றத்தில் உள்ள சமூகத் தடுப்பூசி மையத்தைப் பார்வையிட்டபோது தெரிவித்தார்.
அந்த மையமும் அங் மோ கியோவில் உள்ள டெக் கீ சமூக மன்றத்திலும் அத்தகைய முதல் இரண்டு தடுப்பூசி மையங்கள் உள்ளன. தேசிய அளவில் 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட அமைக்கப்பட்ட மையங்கள் அவை.
தடுப்பூசிகள் வந்து சேர்வதற்கு முன்பே தடுப்பூசி போடுவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதே நோக்கம் என்று குறிப்பிட்டார் திரு சான்.
தடுப்பூசிகள் சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்ததும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களுக்கு கடிதம் அனுப்பப்படும். அதனையடுத்து, அவர்கள் முன்பதிவு செய்யத் தொடங்கலாம்.
தஞ்சோங் பகார் சமூக மன்றத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை ஊக்கமளிப்பதாக இருப்பதாகக் குறிப்பிட்ட திரு சான், தடுப்பூசி போடப்பட்ட முதல் 2 நாட்களில் 300 வயதானவர்கள் பதிவு செய்துகொண்டனர் என்றார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களை ஊக்குவித்த அவர், தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்குமென நம்பிக்கை தெரிவித்தார்.
முகக்கவசங்கள், ‘டிரேஸ் டுகெதர்’ வில்லை போன்றவற்றைப் பெற வயதானவர்கள் அடிக்கடி சென்று வரும் இடம் என்பதால் தடுப்பூசி போடுவதற்கு சமூக மன்றங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக திரு சான் குறிப்பிட்டார்.
நாளை தஞ்சோங் பகார் சமூக மன்றத்தில் திரு சான் சுங் சிங் தடுப்பூசி போட்டுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு சமூகத் தடுப்பூசி மையத்திலும் நாளொன்றுக்கு சுமார் 2,000 பேருக்கு தடுப்பூசி போட இயலும். காலை 8 முதல் இரவு 10 மணி வரை தடுப்பூசி போடப்படும்.
இது தொடர்பான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (ஜனவரி 27) அச்சுப் பிரதியை நாடவும்!