சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள், வீடுகளில் தங்கியிருந்து கவனித்துக்கொள்ளும் செவிலியர் போன்றவர்களுக்கு கூடுதல் கொரோனா தொற்று பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மனிதவள அமைச்சு இன்று (பிப்ரவரி 3) தெரிவித்தது.
இது வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 5) முதல் நடப்புக்கு வரும்.
கொவிட்-19 தொற்று அபாயம் அதிகம் இருக்கும் பகுதிகள் என சிங்கப்பூர் கருதும் நாடுகளிலிருந்து வருவோருக்கு இந்த புதிய நடைமுறை பொருந்தும்.
வேலை அனுமதி அட்டை மற்றும் எஸ்-பாஸ் அனுமதி அட்டை ஆகியவற்றுடன் கட்டுமானம், கடல்துறை, பதனீட்டு துறை போன்றவற்றில் பணிபுரிய சிங்கப்பூருக்கு புதிதாக வந்த ஊழியர்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவை நிறைவேற்றிய பிறகு அவர்களுக்கு 7 நாள் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பிப்ரவரி 5 நிலவரப்படி வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவு நிறைவேற்றி முடிக்காதவர்கள், அந்தத் தேதியிலிருந்து புதிதாக சிங்கப்பூருக்கு வரும் இந்தப் பிரிவினர் ஆகியோருக்கும் இந்த கூடுதல் நடைமுறை பொருந்தும்.
இந்தப் புதிய நடைமுறையின்கீழ், அந்தப் பணியாளர்கள் கூடுதலாக ஏழு நாள்கள் தனிமைப்படுத்தலுக்காக ஒதுக்கப்பட்ட வளாகத்தில் தங்கியிருக்க வேண்டும். அவர்கள் பணிக்குச் செல்லும்போது அவர்களுக்கு கூடுதல் எச்சில் / சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
சிங்கப்பூருக்கு வந்ததும் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு, வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவை அதற்கான வளாகத்தில் 14 நாட்களுக்கு முடித்த பிறகு இந்தக் கூடுதல் நடைமுறை இடம்பெறும்.
ஜனவரி 6ஆம் தேதி முதல் விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்களுக்கு இந்தக் கூடுதல் பரிசோதனை நடைமுறை ஏற்கெனவே நடப்பில் உள்ளது.
வேலையிடங்களில் கொவிட்-19 பரவும் அபாயத்தை மேலும் குறைக்கும் நோக்கில், அமைச்சுகள் நிலை பணிக்குழு இந்த கூடுதல் பரிசோதனை நடவடிக்கை பற்றி முடிவு செய்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
வரும் வெள்ளிக்கிழமை முதல் வெளிநாட்டு இல்லப் பணிபெண்களும் தங்கியிருந்து பணியாற்றும் செவிலியர்களும் சிங்கப்பூருக்கு வந்ததும் பிசிஆர் பரிசோதனையுடன் ‘சீராலஜி’ பரிசோதனையையும் மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டு குணமடைந்தவர்களை தற்போது கிருமித்தொற்று ஏற்பட்டவர்களிடமிருந்து பிரிக்க முடியும். அதன்மூலம் கொவிட்-19க்கான நோயெதிர்ப்புத் திறன் பெற்றவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்படுவர். இதன் மூலம் ஊழியர்களின் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டிய உத்தரவுக்கு கட்டணம் செலுத்தும் முதலாளிகளின் செலவு குறையும் என்றது மனிதவள அமைச்சு.
கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கு வரும் கட்டுமான, கடல் துறை மற்றும் பதனீட்டு துறை ஊழியர்களுக்கு பிசிஆர் மற்றும் சீராலஜி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
நோயெதிர்ப்புத் திறன் பெற்ற ஊழியர்கள்ளுக்கு, வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டிய உத்தரவு, 7 நாள் பரிசோதனை விதிமுறை, அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான பரிசோதனை போன்றவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது.