தெமாசெக் ஹோல்டிங்சின் தலைமை நிர்வாகி ஹோ சிங் அந்த பொறுப்பிலிருந்து வரும் அக்டோபர் மாதம் முதல் தேதி ஓய்வு பெறுகிறார்.
தெமாசெக் இன்டர்நேஷனல் (TI) எனும் தெமாசெக் ஹோல்டிங்சின் முதலீட்டை நிர்வகிக்கும் வர்த்தகப் பிரிவின் தலைமை நிர்வாகியாக இருக்கும் திரு டில்ஹன் பிள்ளை, அக்டோபர் முதல் தேதியன்று அந்தப் பதவியை ஏற்பார்.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்ற திரு பிள்ளை, TI நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பையும் தொடந்து வகிப்பார்.
தெமாசெக் ஹோல்டிங்ஸ் தலைவர் திரு லிம் பூன் ஹெங் இந்தத் தகவலை இன்று (பிப்ரவரி 9) தெரிவித்தார்.
“தலைமைத்துவ மாற்றம் என்பது இயக்குநர் சபையின் உத்திபூர்வ பொறுப்பு. சில ஆண்டுகளாகவே வருடாந்திர மறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் திருவாட்டி ஹோ சிங் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார். பொறுப்புகளை அடுத்து ஏற்போரை தெமாசெக் நிறுவனத்தின் உள்ளேயும் வெளியேயும் அடையாளம் காணும் பணியில் அவர் சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வந்தார்,” என்று திரு லிம் குறிப்பிட்டார்.
சுமார் 20 ஆண்டுகளாக திருவாட்டி ஹோ, 67, தெமாசெக் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளில் இருந்து ஆற்றிய பணிகளைத் திரு லிம் பாராட்டினார்.
தெமாசெக்கில் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில் திருவாட்டி ஹோ நிறுவனத்தை வழிநடத்தியதற்காக இயக்குநர் சபை நன்றி கூற விரும்புகிறது என்றார் திரு லிம்.
“சிங்கப்பூரில் அரசாங்க நிறுவனங்களின் பங்குகளை வாங்கி அவற்றின் மீதான உரிமையை வைத்துக்கொள்ளும் நிறுவனமாக முன்பு இருந்த தெமாசெக் நிறுவனம், அனைத்துலக அளவில் அங்கீகாரம் பெற்ற, மதிப்புமிக்க முதலீட்டு நிறுவனமாக, முன்னேற்றத்தை நோக்கி வெற்றி நடை போடும் நம்பகமான நிறுவனமாக மாறியுள்ளது, என்றார் திரு லிம்.
திருவாட்டி ஹோ 2004ஆம் ஆண்டு தெமாசெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றபோது, பெரும்பாலும் உள்ளூரில் முதலீடு செய்யும் $90 பில்லியன் மதிப்புடைய நிறுவனமாக இருந்தது. ஆனால், தற்போது, கொவிட்-19 காலகட்டத்தில் அனைத்துலக நிதி நெருக்கடியிலும் பாதிக்கப்படாத அளவுக்கு $300 பில்லியனுக்கும் அதிக மதிப்புடைய நிறுவனமாக உள்ளது.
தெமாசெக்கின் நிர்வாக இயக்குநராகவும் ‘டிஐ’யின் தலைவராகவும் இருக்கும் திரு லீ தெங் கியட், தமது நிர்வாகப் பதவியிலிருந்து ஓய்வு பெற்று தெமாசெக் நிர்வாகப் பொறுப்பில் இல்லாத தெமாசெக் இயக்குநர் சபை உறுப்பினராகவும் ‘டிஐ’யின் நிர்வாகப் பொறுப்பில் இல்லாத தலைவராகவும் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
திரு பிள்ளை 2010ஆம் ஆண்டில் தெமாசெக்கில் இணைந்தார். நிறுவனச் சட்டம், நிறுவன ஆளுமை, இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல் போன்ற சட்டப் பிரிவுகளில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் அவர்.
‘டிஐ’யின் தலைமை நிர்வாகியாக 2019ஆம் ஆண்டில் சேர்ந்த திரு பிள்ளை, அதன் நிதி இருப்புகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்புகளை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.