சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டு படிப்படியாக வளர்ச்சி காணும் என்று தொடர்ந்து முன்னுரைக்கப்பட்டு வருகிறது.
வேலை இல்லாதவர்களுக்கும் அதிகம் பாதிப்படையக்கூடும் பிரிவினருக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டு 4லிருந்து 6 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு முன்னுரைத்துள்ளது.
மற்ற நாடுகளில் நிகழும் நேர்மறையான, எதிர்மறையான நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இதே முன்னுரைப்பை அமைச்சு முன்வைத்தது.
2011ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 விழுக்காடு அதிகரித்தது.
அதையடுத்து இவ்வாண்டு இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆக அதிகமாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் இரண்டாம் காலாண்டில் பொருளியல் 13.3 விழுக்காடு சரிந்தது.
இவ்வாண்டு பதிவாகும் பொருளியல் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டின் சரிவு ஒரு காரணமாகவும் அமையக்கூடும்.
கடந்த ஆண்டு கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரின் பொருளியல் 5.4 விழுக்காடு வீழ்ச்சி கண்டதாக அமைச்சு கூறியது.
இதுவே சிங்கப்பூர் தனிநாடான பின் சந்தித்துள்ள ஆக மோசமான பொருளியல் மந்தநிலை. 2019ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 1.3 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
நான்காம் காலாண்டுக்கான முன்னுரைப்பைவிட பொருளியல் கூடுதலாக சரிந்தது.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் பொருளியல் 2.4 விழுக்காடு குறைந்தது.
மூன்றாவது காலாண்டில் பதிவான 5.8 விழுக்காடு வீழ்ச்சியைவிட இது குறைவு.
காலாண்டுக்குக் காலாண்டு அடிப்படையில் நான்காவது காலாண்டில் பொருளியல் 3.8 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிங்கப்பூர் பொருளியல் ஆய்வு நடத்தப்பட்டதிலிருந்து கொவிட்-19 தடுப்பூசி மருந்து தயாரிப்பிலும் விநியோகத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அங்கீகாரம் பெற்ற பல தடுப்பூசி மருந்துகள் உலகெக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்றும் வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.
“தடுப்பூசி மருந்து விநியோகம் செய்யப்படும் வேகம் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது. இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வலிமையான பொருளியலைக் கொண்ட நாடுகளில் மக்கள் அனைவருக்கும் இவ்வாண்டின் இரண்டாம் பாதிக்குள் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இதன் காரணமாக இந்நாடுகள் பொருளியல் மந்தநிலையிலிருந்து மீண்டு வருவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது,” என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளான மலேசியாவிலும் இந்தோனீசியாவிலும் அண்மைய காலமாக கொவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் அவ்விரு நாடுகளின் பொருளியல் மீட்சிக்கான வாய்ப்புகள் பலவீனம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
“வெளிநாடுகள், உள்ளூரில் நிலவும் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது அடுத்த ஓராண்டில் சிங்கப்பூரின் பொருளியல் படிப்படியாக மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“ஆனால் வெவ்வேறு துறைகளில் வளர்ச்சி வேறுப்படும்,” என்று அமைச்சு தெரிவித்தது.
வெளிநாடுகளின் பொருளியல் மீண்டு வருவதால் வர்த்தகம் தொடர்பான சேவைகள் பலன் அடையும் என்று அமைச்சு கூறியது. முன்பு முன்னுரைக்கப்பட்டதைவிட உற்பத்தித் துறை இன்னும் வேகமாக விரிவடையும் என்று நம்பப்படுகிறது.
தகவல், தொழில்நுட்பம், மின்னிலக்கத் தீர்வுகள் முதலி யவற்றுக்கான தேவை அதிகரித்திருப்பதால் தகவல், தொடர்பு துறை, நிதித் துறை, காப்புறுதித் துறை ஆகியவை தொடர்ந்து சீரான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.