மொத்தம் 36 தடுப்பூசி நிலையங்களையும் 10 நடமாடும் தடுப்பூசி குழுக்களையும் அமைத்து செயல்படுத்தட ராபிள்ஸ் மெடிக்கல், பார்க்வே ஷென்டான், தாம்சன் மெடிக்கல் உட்பட 17 சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்களை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.
வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 22) முதல் மூத்தோருக்கு தடுப்பூசி போட சிங்கப்பூர் திட்டமிடுவதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் தஞ்சோங் பகார், அங் மோ கியோ சமூக நிலையங்களில் மூத்தோருக்கு தடுப்பூசி போடும் பணியின் முன்னோட்டம் பார்க்கப்பட்டது.
மொத்தம் $38 மில்லியன் மதிப்பிலான இந்த ஒப்பந்தப்புள்ளி இம்மாதம் 11ஆம் தேதி 17 சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணத்தைப் பார்த்ததாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
நாள்தோறும் சுமார் 2,000 பேருக்கு தடுப்பூசி நிலையங்கள் தடுப்பூசி போடும் திறன் பெற்றிருக்க வேண்டும் என்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தடுப்பூசி நிலையங்களும் குழுக்களும் படிப்படியாக அமைக்கப்படும் என்றும் அந்த எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
சாட்டா காம்ஹெல்த், ஃபுல்லர்ட்டான் ஹெல்த்கேர் குழுமம், ஹெல்த்வே மெடிக்கல் குழுமம் போன்றவையும் அந்த 17 நிறுவனங்களில் அடங்கும். மொத்தம் 21 நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளியைச் சமர்ப்பித்திருந்தன.
காலியாக இருக்கும் பள்ளிகள், சமூக மன்றங்கள், விளையாட்டுக் கூடங்கள் போன்ற இடங்களில் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்படும். அந்த நிலையங்கள் 12 மாதங்கள் வரை செயல்படும். தினமும் காலை 8 முதல் இரவு 10 மணி வரை, வாரயிறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் அவை செயல்படும்.
நடமாடும் தடுப்பூசி போடும் குழுக்களில் ஒரு மருத்துவர், 4 தாதியர், 3 நிர்வாக ஊழியர்கள் ஆகியோர் இருப்பர். அந்தக் குழு தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும்.
இரண்டு தடுப்பூசி நிலையங்களையும் இரண்டு நடமாடும் தடுப்பூசி குழுக்களையும் செயல்படுத்த இருப்பதாக சாட்டா காதெல்த் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் நிறுவன விவகாரங்கள் தலைவர் சுகுமாறன் சுப்ரமணியன் குறிப்பிட்டார்.
அந்த நிறுவனத்தின் நடமாடும் தடுப்பூசி குழு இம்மாதம் 15ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது. கடந்த 4 நாட்களில் அவை 400 பேருக்கு தடுப்பூசிகள் போட்டுள்ளன.
இந்த இரு குழுக்களும் நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு தடுப்பூசி போடும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தீவு முழுவதும் உள்ள 24 நகரங்களிலும் தலா ஒரு சமூகத் தடுப்பூசி நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் அமைக்கப்படும் என சுகாதார அமைச்சு முன்பு தெரிவித்திருந்தது.
இங்குள்ள 20 பலதுறை மருந்தகங்களிலும் சில தனியார் மருந்தகங்களிலும் தடுப்பூசிகள் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.