அரசாங்கம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் இரண்டும் இணைந்து அமைக்கப்பட்ட வாழ்க்கைத் தொழில் நிலையங்கள் கடந்த ஆண்டில் 25,000 சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கு வேலை தேடிக் கொடுத்துள்ளது என்றும் அது முந்திய ஆண்டைவிட 25% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை தேடும் பத்து பேரில் அறுவர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) என்று சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு நேற்று வெளியிட்ட வேலை நிலவர அறிக்கையில் கூறியது.
கடந்த ஆண்டு மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோவால் தொடங்கப்பட்ட வேலை நிலவர அறிக்கை ஆட்சேர்ப்பு அதிகம் உள்ள துறைகளை அடையாளம் காட்டியது.
நேற்று வெளியிடப்பட்ட 19வது அறிக்கையில் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பும் என்டியுசியில் வேலை வாய்ப்பு, வேலைப் பயிற்சிக் கழகமும் (இ2ஐ) மேற்கொண்ட வேலையுடன் ஊழியரைப் பொருத்தச் செய்யும் முயற்சிகளைக் கடந்த ஆண்டு துரிதப்படுத்தியதை எடுத்துக்காட்டியது.
தனிப்பட்ட முறையில் வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பு 34,000 வேலை தேடுவோருக்குப் பலனளித்தது. அவர்களில் மூன்றில் இருவர் பிஎம்இடி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் இது 2019ஐ காட்டிலும் 15% அதிகரிப்பு என்றும் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு விவரித்தது.
வாழ்க்கைத்தொழில் பயிற்சிபெற்றவர்களில் பத்தில் எட்டுப் பேர் வேலையில்லாமல் இருந்தவர்கள். பத்தில் அறுவர் 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். பத்தில் நால்வர் கடந்த ஆறு மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்கள்.
13,000க்கு மேற்பட்ட தனிநபர்கள் கடந்த ஆண்டு பணியிடைக்கால வேலை மாற்றுத் திட்டங்கள் போன்ற வாழ்க்கைத்தொழில் உருமாற்றுத் திட்டங்களில் பதிந்துகொண்டனர். இந்த எண்ணிக்கை முந்திய ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம்.
கடந்த ஆண்டு 1,300க்கு மேற்பட்ட வாழ்க்கைத்தொழில் சந்தைகளும் அது தொடர்பான நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இது முந்திய ஆண்டைக் காட்டிலும் 40% அதிகம்.
மெய்நிகர் மற்றும் நேரடி வாழ்க்கைத்தொழில் சந்தை, வேலை தொடர்பான நேர்காணல்கள், வாழ்க்கைத்தொழில் பொருத்தச் சேவைகள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.
வேலை தோடுவோரின் மிகப் பெரிய சவால்களாக, அவர்களுக்குள் இருக்கும் உணர்ச்சித் தடைகள், திறன் இடைவெளி, புதிய வேலை நிலைகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத போக்கு, வேலை தேடும் பழைய உத்திகள் போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு விளக்கியது.
இவர்களுக்கு உதவும் வகையில் அந்த அமைப்பும் 'இ2ஐ' கழகமும் பயிலரங்குகள், கருத்தரங்குகள், தனிப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.

