கிருமித்தொற்றிலிருந்து பாதுகாக்க முகக்கவசம் ஒரு கேடயமாகப் பயன்படுத்தப்படுவதை நன்கு உணர்ந்துள்ள தெமாசெக் அறநிறுவனம் மற்றொரு முறை முகக்கவசங்களையும் கை சுத்திகரிப்பானையும் இலவசமாக வழங்கவிருக்கிறது.
மார்ச் மாதத்தில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களும் ஏப்ரலில் கை சுத்திகரிப்பானும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தெமாசெக் அறநிறுவனம் தெரிவித்தது.
இதற்காக தீவு முழுவதும் ஏற்கெனவே உள்ள முகக்கவசம் விநியோகிக்கும் இயந்திரங்களில் ‘லிவிங்கார்ட்’ எனும் சுவிட்சர்லாந்து நிறுவனம் தயாரித்துள்ள புதிய நீலநிற முகக்கவசங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
இதனை மார்ச் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர்வாசிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெமாசெக்கின் தலைமை நிர்வாகி ஹோ சிங் இன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முகக் கவசம் விநியோகிப்பு நடைபெறும்.
முகக்கவசங்கள் ஈரடுக்குகளைக் கொண்டது. வெளிப்புறத்தில் உள்ள நீர்ப்புகாத முதல் அடுக்கு கிருமிகளிலிருந்து பாதுகாக்கும். உள்புறத்தில் உள்ள மற்றொரு அடுக்கு ஒருவரது எச்சிலிலிருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களைக் கொல்லும் தன்மை கொண்டது என்று திருவாட்டி ஹோ கூறினார்.
“அன்றாடப் பயன்பாட்டுக்குப் பிறகு முகக்கவசங்களை கழுவ வேண்டியதில்லை. வாரத்திற்கு ஓரிருமுறை கழுவினால் போதும். இப்படி முப்பது முறை கழுவினால் கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு முகக் கவசங்களைப் பயன்படுத்த முடியும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முப்பது முறை கழுவிய பிறகும் மற்றொரு முகக்கவசத்துக்கு மேல் இதனை கூடுதல் பாதுகாப்புக்கு அணிந்து கொள்ளலாம்.
இப்படிச்செய்வதால் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அல்லது பிரேசில் போன்ற நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கிருமிகள் சிங்கப்பூரில் பரவினால் அவற்றை எதிர்த்து மிகுந்த பாதுகாப்பு அளிக்கும் என்று திரு வாட்டி ஹோ குறிப்பிட்டார்.
முகக்கவசத்தின் முகவாய்ப் பகுதி நெகிழும் தன்மையுள்ளதால் காற்றுப்புகாதவாறு முகத்துக்குப் பொருத்தமாக மூட முடியும்.
கடந்த நவம்பர் மாதம் விநியோகிக்கப்பட்ட முகக்கவசங்களைவிட தற்போது வழங்கப்படும் முகக் கவசங்கள் அளவில் வேறுபட்டிருக்கும்.
முகக்கவசங்களின் அளவை பார்த்து வாங்குமாறு அறிவுறுத்திய திருவாட்டி ஹோ, சமூக நிலையங்களில் தடுப்பூசி போடப்படுவதால் முகக்கவசங்களை விநியோகிக்கும் தானியக்க இயந்திரங்கள் அருகில் உள்ள வீவக புளோக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதை நினைவூட்டினார்.
இது மட்டுமல்லாமல் உள்ளூர் நிறுவனமான கிளென்கோ தயாரித்து உள்ள கைசுத்திகரிப்பானும் ஒவ்வொரு வீட்டுக்கும் 500 மி.லிட்டர் வழங்கப்படும் என்று தெமாசெக் அறநிறுவனம் தெரிவித்தது.
இதன் விநியோகம், நாடு முழுவதும் ஏப்ரல் நடுப்பகுதியில் தொடங்கப்படும்.
குடியிருப்பாளர்கள் தங்களுடைய எஸ்பி பயனீட்டுக் கட்டண கடிதத்தைக் காட்டி சுத்திகரிப்பானைப் பெபற்றுக் கொள்ளலாம். ஆனால் சொந்தமாக பிளாஸ்டிக் அல்லது ஷாம்பூ காலி போத்தல்களை கொண்டு வர வேண்டும்.