படிப்படியாக உயரும் சம்பள முறையை சில்லறை வர்த்தகத் துறையில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
இந்தச் சம்பளமுறை நடப்புக்கு வந்தால் அந்தத் துறையில் உள்ள குறைந்த வருமான ஊழியர்கள் தங்களது செயல்திறன்களுக்கும் உற்பத்தித்திறன்களுக்கும் ஏற்ற வகையில் கட்டம் கட்டமாக வருமான உயர்வைப் பெறுவர்.
முதன்முதலாக கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட படிப்
படியாக உயரும் சம்பளமுறை, வெவ்வேறு வேலைப் பொறுப்புகளில் உள்ள உள்ளூர் ஊழியர்
களின் திறன்கள் அதிகரிக்கும்போது அதற்கேற்ப சம்பளத்தையும் உயர்த்தும் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு துறையிலும் உள்ள ஊழியர்களின் வாழ்க்கைத்தொழில் முன்னேற்றத்துக்கும் அது வழிகோலுகிறது.
தற்போது துப்புரவு, நிலவனப்பு, பாதுகாவல் போன்ற துறைகளில் இந்தச் சம்பளமுறை கட்டாயமாக் கப்பட்டுள்ளது. இவற்றில் மட்டும் சுமார் 80,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
அடுத்த ஆண்டு முதல் மின்தூக்கி, மின்படிக்கட்டு பராமரிப்புத் துறையினருக்கும் இம்முறையைக் கடைப்பிடிப்பது கட்டாயமாகிறது.
இதனை சில்லறை வர்த்தகங்களுக்கும் நீட்டித்தால் பேரங்காடி கள், அக்கம்பக்கக் கடைகள், ஆடையலங்காரக் கடைகள் போன்றவற்றின் விற்பனை சேவை ஊழியர்களும் காசாளர்களும்பலனடைவர் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமான ஊழியர்களுக்கான முத்தரப்பு பணிக் குழுவுக்குத் தலைமை ஏற்றுள்ள அவரிடம் குழு நடத்தி வரும் ஆய்வுக்குக் காலக்கெடு ஏதும் உள்ளதா என்று வினவப்பட்டது. அதுகுறித்த மேல்விவரங்களை விரைவில் குழு வெளியிடும் என்றார் அவர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்படுத்தப்பட்ட இக்குழு, இந்த சம்பளமுறையை அறிமுகம் செய்வதற்கான சாத்தியம் குறித்து பல்வேறு துறைகளை ஆய்வில் எடுத்துக்கொண்டு உள்ளது.
தொழில்துறைத் தலைவர்கள் முதல் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனப் பிரதிநிதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள், மூத்த அரசாங்க ஊழியர்கள் போன்றோர் வரை பலரும் இந்தக் குழுவில் இடம்பெற்று உள்ளனர்.
இந்த சம்பளமுறை குறித்த நல்லதொரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 'அடிடாஸ்' கடைக்கு நேற்றுச் சென்ற திரு ஸாக்கி, அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
படிப்படியாக உயரும் சம்பளமுறை மூலம் சில்லறை வர்த்தகத் துறையில் எத்தனை ஊழியர்கள் பலனடைவார்கள் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.
"குறைவான ஊதியம் பெறும் உள்ளூர் ஊழியரணியில் கணிசமான எண்ணிக்கையில் சில்லறை வர்த்தக ஊழியர்கள் உள்ளனர் என்பதால் அவர்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. அதன்தொடர் பில் பல்வேறு நுணுக்கங்கள் ஆராயப்பட வேண்டி உள்ளன. சில நிறுவனங்கள் திறன் மிகுந்தவர்களை நல்ல சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தும் அதேநேரம் சிறிய கடைகள் தங்களது ஊழியர்களுக்குக் குறைவான ஊதியத்தை வழங்குகின்றன," என்றார் அமைச்சர்.
ஒவ்வொரு துறையும் ஏதோ ஒரு வகையில் படிப்படியாக உயரும் சம்பள முறையைப் பெற்றிருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பம் என்று இம்மாதம் 16ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்து பேசியபோது துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் குறிப்பிட்டார்.

