ஈசூன் தொழிற் பேட்டையில் அமைந்துள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா, இவ்வாண்டின் கொவிட்-19 சூழல் காரணமாக, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி புதிய விதிமுறைகளுடன் நடைபெறவுள்ளது.
வரும் மார்ச் மாதம் 28ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, முக்கிய விவரங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில்.
முக்கிய விதிமுறைகள் சில:
- கடந்த ஆண்டின் திருவிழாவைப்போல இம்முறையும் எல்லா வகையான காவடிகளுக்கும் ஊர்வலத்திற்கும் அனுமதி கிடையாது. கடந்த ஆண்டும் கொவிட்-19 சூழல் காரணமாக கோலாகல கொண்டாட்டங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- உடலின் எந்த பகுதியிலும் அலகு குத்தி வரும் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- கோயிலே தயாரித்து வழங்கும் பால் குடங்கள், பால் பொட்டலங்கள் மட்டுமே வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்படும்.
- திருவிழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களும் கட்டாயமாக முன்பதிவு செய்யவேண்டும்.
- பால் குடம் எடுக்கும் பக்தருடன் சேர்ந்து ஒரு பக்தர் மட்டுமே கோயிலுக்குள் செல்லலாம். இரண்டு பேருக்கு மேலான எண்ணிக்கையில் வரும் குழு கோயிலுக்குள் செல்ல முடியாது.
- முகக்கவசம் அணிவது, 'சேஃப் என்ட்ரி' அல்லது 'டிரேஸ் டுகெதர்' கருவியோ, செயலியோ பயன்படுத்தி கோயிலுக்குள் நுழைவது, பாதுகாப்பு இடைவெளி கடைப்பிடிப்பது போன்ற பாதுகாப்பு அம்சங்களைப் பக்தர்கள் கடைப்பிடிப்பது அவசியம்.
இவ்வாண்டின் பங்குனி உத்திரத் திருவிழாவின் விவரங்கள் குறித்து தமிழ் முரசு கோயிலை அணுகியது.
பங்குனி உத்திர தினத்தன்று, அதிகாலை 12 மணி முதல் காலை 8.30 மணி வரை பால் குடம் எடுக்க ஒதுக்கப்பட்ட நேரம். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பொது வழிபாட்டு பக்தர்களுக்கு நேரம் ஒதுக்கப்படுவதாக கோயிலில் நிர்வாகக் குழுச் செயலாளர் திரு அண்ணாதுரை அழகப்பன் தெரிவித்தார்.
“கோயிலுக்குள் எந்த நேரத்திலும் மொத்தம் 250 பேர் மட்டுமே இருக்க முடியும். பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கி திருவிழாவை நடத்த இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளோம். பால் குடம் எடுக்கும் பக்தர்கள் 3,500 முதல் 4,000 வரை, பொது பக்தர்கள் 3,000 முதல் 3,500 வரை என்ற அளவில் பக்தர்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்,” என்றார் திரு அண்ணாதுரை.
பால் குடத்திற்கான கட்டணம் $20; வழிபாடுகள் முடிந்த பின்னர் காலியான பால் குடத்தை பக்தர்கள் எடுத்து செல்லலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை முன்பதிவு வசதிகள் செயல்படுத்தப்படும்.
கடந்த ஆண்டு பங்குனி உத்திரத்தின்போது கோயிலுக்குள் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், கோயில் வாசலில் உற்சவரின் சிலை வைக்கப்பட்டது.
பொது வழிபாடு உட்பட பக்தர்கள் வாசலிலிருந்தே பால் பொட்டலங்களை வாங்கி காணிக்கையாகச் செலுத்த மட்டுமே முடிந்தது.
இவ்வாண்டு கோயிலுக்குள் சென்று பால் குடங்கள் எடுக்கலாம். பக்தர்கள் தங்களது பால் காணிக்கைகள் மூலவருக்கு செலுத்தப்படுவதைக் காணலாம். விருப்பமுள்ள பக்தர்கள் அர்ச்சனையும் செய்யலாம்.
மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களும் முன்பதிவுக்கான முறைகளும் குறித்து கோயில் இணையப்பக்கத்திலும் ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.