சிங்கப்பூரில் இருமுறை கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 23 வயது வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த அந்த ஊழியர், வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் வசிக்கிறார்.
அந்த வெளிநாட்டு ஊழியரையும் சேர்த்து சிங்கப்பூரில் புதிதாக 20 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. எஞ்சிய 19 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
செந்தோசாவுக்கு வடக்கே பிராணி டெர்மினல் அவென்யூவில் உள்ள தங்குவிடுதியில் வசிக்கும் அந்த 23 வயது ஊழியருக்கு இந்த மாதம் 7ஆம் தேதி அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாள் அவருக்குத் தொற்று உறுதியானது.
உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை தனிநபர் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தப் பரிசோதனையிலும் அவருக்குத் தொற்று உறுதியானது. அதன் பின்னர் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
“தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கும் கிருமித்தொற்று பாதிப்பு ஏற்படுவது சாத்தியம் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு நினைவுபடுத்துகிறது,” என்று அமைச்சு கூறியது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகளுடன் கூடிய கொவிட்-19 நோயைத் தடுப்பதில் தடுப்பூசி செயல்திறன் உடையதாக இருக்கிறது என்று அமைச்சு கூறியது.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் ஒருவருக்குத் தொற்று உறுதியாகியிருப்பது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதிக்குப் பிறகு இதுவே முதன்முறை.