சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 16) நண்பகல் நிலவரப்படி புதிதாக 34 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் சமூக அளவில் இருவருக்குத் தொற்று உறுதியானது. ஒரே நாளில் சமூகத்தில் இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பது கடந்த மார்ச் 3ஆம் தேதிக்குப் பிறகு இதுவே முதன்முறை.
தொற்று உறுதியான எஞ்சிய 32 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் புதிதாக எவருக்கும் தொற்று பாதிப்பு பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 60,769 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

