தமது வீட்டின் வரவேற்பறையில் தமது பேரப்பிள்ளையைப் பார்த்துக்கொண்டு இருந்தார் திருவாட்டி ஹெங், 70. இன்று (ஏப்ரல் 19) காலை 10.10 மணிக்கு வீட்டிலிருந்து சற்று தொலைவில் ஏதோ இடிந்துவிழுவதுபோல பெரிய சத்தம் அவருக்குக் கேட்டது.
அதைத் தொடர்ந்து உலோகம் நொறுங்குவதுபோன்ற விசித்திரமான சத்தமும் கேட்டது. இன்று மாலை தமது மகன் புக்கிட் பாத்தோக்கில் உள்ள தமது வீட்டிற்கு வந்தவுடன்தான், நடந்தது என்ன என்பதை திருவாட்டி ஹெங் தெரிந்துகொண்டான்.
தமது வீட்டிற்கு எதிர்ப்புறம் உள்ள தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளுக்கான (பிடிஓ) கட்டுமானத் தளத்தில் 12 மீட்டர் உயரமுள்ள எஃகு அமைப்பு இடிந்து விழுந்தது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
தெங்கா கார்டன் அவென்யூ, பிளாண்டேஷன் கிரசென்ட், தெங்கா பொலிவார்ட்டில் பொது வீடமைப்புக் கட்டுமானத் தளத்திற்குப் பக்கத்தில் உள்ள நிலப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அமைச்சு கூறியது.
அந்த எஃகு அமைப்பு நிமிர்த்தப்பட்டபோது அதன் ஒரு பகுதி, கட்டுமானத்துறை ஊழியர்களுக்கான தற்காலிக தங்குமிடத்தின் மீது விழுந்தது. அப்போது அந்த தங்குமிடத்தில் ஊழியர் எவரும் இல்லை.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தக் கட்டுமானத் தளத்தில் அனைத்துப் பணிகளையும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) நிறுத்திவைத்து உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விவகவுடன் சேர்ந்து அமைச்சு பணியாற்றி வருகிறது.
தெங்கா டிரைவ், புக்கிட் பாத்தோக் சாலைச் சந்திப்புக்கு அருகே உள்ள கட்டுமானத் தளத்தில் உதவி கேட்டு இன்று பிற்பகல் 2.05 மணிக்குத் தனக்கு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. ஆனால் இறுதியில் அதன் உதவி எதுவும் தேவைப்படவில்லை.
கட்டுமானத் துறையில் வேலை செய்யும் திருவாட்டி ஹெங்கின் மகனான திரு டான், இந்தச் சம்பவம் நிகழ கனமழைத்தான் காரணம் என்று சொல்ல இயலாது என்றார்.
“நல்ல வேளையாக அந்தத் தருணத்தில் ஊழியர்கள் எவரும் தங்குமிடத்தில் இருக்கவில்லை,” என்று அவர் சொன்னார்.