இந்தியாவுக்கு கடந்த 14 நாள்களுக்கு பயணம் மேற்கொண்ட நீண்டகால அனுமதி அட்டை வைத்து இருப்போரும் குறுகிய கால வருகையாளர்களும் சிங்கப்பூர் வர அனுமதி அளிக்கப்படாது.
சிங்கப்பூர் வழியாக அவர்கள் இடைவழிப் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்படும்.
இந்த நடைமுறை நாளை (ஏப்ரல் 23) இரவு 11.59 மணி முதல் நடப்புக்கு வருகிறது என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று (ஏப்ரல் 22) தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்குள் நுழைய ஏற்கெனவே அனுமதி பெற்றவர்களுக்கும் இது பொருந்தும் என்றார் அவர்.
இதற்கிடையே, இந்தியாவுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் திரும்பியவர்கள் இன்று (ஏப்ரல் 22) இரவு 11.59 மணி நிலவரப்படி, 14 நாள் இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்றி முடிக்காதவர்கள், கூடுதலாக ஏழு நாள்கள் பிரத்தியேக வசிப்பிடத்தில் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.
சிங்கப்பூர் வந்திறங்கியதும் இல்லத் தனிமை உத்தரவின் 14வது நாளிலும் இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்றுவதற்கு முன்பும் அவர்கள் அனைவரும் ‘பிசிஆர்’ பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
இந்தியாவில் கொவிட்-19 பரவல் மோசமடைந்துள்ளதால் சிங்கப்பூர் தனது எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி இருப்பதாக அமைச்சர் வோங் விளக்கமளித்தார்.
நூறு விழுக்காடு தவறு ஏற்பட வாய்ப்பில்லாததாக இல்லத் தனிமை உத்தரவுக் காலத்தைக் கருத முடியாது எனக் கூறிய திரு வோங், புதிதாக வரும் இந்திய ஊழியர்கள் மூலமாக தங்குவிடுதிகளில் புதிய உருமாறிய கிருமி பரவி, புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் கிருமிப் பரவல் அதிகரித்து வருவதாலும் புதிது புதிதாக உருமாறிய கிருமிகள் தோன்றுவதாலும் கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்புநிலையை சிங்கப்பூர் அதிகப்படுத்தி இருப்பதாக சுகாதார அமைச்சரும் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான கான் கிம் யோங் தெரிவித்தார்.