இரண்டாவது கிருமித் தொற்று அலையில் இந்தியா சிக்குண்டு தவித்து வருகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கிருமித்தொற்றால் ஆக்ஸிஜனுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நோயாளிகள் பலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இந்தியாவில் மருத்துவமனைகள் நோயாளிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.
இவ்வேளையில், இருதரப்பு உறவு மற்றும் பல அமைப்புநிலை முயற்சிகளின் ஒரு பகுதியாக நான்கு குளிர்விக்கும் ஆக்ஸிஜன் கொள்கலன்களை சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து இந்திய ஆகாயப் படை விமானம் இன்று (ஏப்ரல் 24) வான்வழியாக இந்தியாவுக்குக் கொண்டு சென்றது. இந்தியாவில் ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதற்கு இந்த கொள்கலன்கள் பயன்படுத்தப்படும் என்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' இணையத்தளம் தெரிவித்துள்ளது.
"கொவிட்-19க்கு எதிரான போரில் நாங்கள் இந்தியாவுடன் இணைந்திருக்கிறோம்," என்று புதுடெல்லி, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள சிங்கப்பூர் தூதரகக் கிளைகள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளன.

