டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளைச் சந்திக்க வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அந்த மருத்துவமனை இன்று (ஏப்ரல் 29) பிற்பகல் அறிவித்துள்ளது.
“நிலைமையைக் கட்டுக்குள் வைக்கவும் ஊழியர்கள், நோயாளிகளின் பாதுகாப்பைக் கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று அந்த மருத்துவமனை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.
அந்த மருத்துவமனையில் பொது சிகிச்சைப் பிரிவில் (general ward) பணியாற்றும் தாதி ஒருவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நோயாளிகளைச் சந்திக்க மருத்துவமனை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
டான் டோக் செங் மருத்துவமனையில் நோயாளிகள் தங்கியிருக்கும் காலம் வரை அவர்களைச் சந்திக்க இருவருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படுவதாக நேற்று (ஏப்ரல் 28) இரவு அந்த மருத்துவமனை தெரிவித்திருந்தது.
ஆனால், மருத்துவமனை அடுத்த அறிவிப்பை வெளியிடும் வரை நோயாளிகளைச் சந்திக்க வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை என அந்த மருத்துவமனை இன்று தெரிவித்துள்ளது.