டான் டோக் செங் மருத்துவமனையில் புதிய கொவிட்-19 தொற்றுக் குழுமம் உருவெடுத்ததை அடுத்து அந்த மருத்துவமனையின் நான்கு வார்டுகள் மூடப்பட்டுவிட்டன.
அந்தக் கிருமித்தொற்று குழுமம் தொடர்பில் மேலும் தொற்று பரவிய சம்பவங்கள் இனிவரும் நாட்களில் தெரியவரும் சாத்தியம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தொற்றுப் பரவல் அதிகம் என்பது தெரியவந்தால் இப்போது இருப்பதைவிட இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று தெரிவித்தார்.
கிருமி தொற்றிய நிலையில் அவர்கள் சென்று வந்திருக்கக்கூடிய அனைத்து பொது இடங்களும் இரண்டு நாட்கள் மூடப்பட்டு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதன்மூலம் சமூகத்தில் இதுவரை வெளியே தெரியாத கிருமித்தொற்று நபர்களிடம் இருந்து கிருமி பரவுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
அதோடு மட்டுமின்றி ஊழியர்களிடம் பரிசோதனை நடத்துவதற்கும் இதன்மூலம் உதவி கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் பல அமைச்சுகளை உள்ளடக்கிய சிறப்புப் பணிக்குழு கொவிட்-19 கிருமித்தொற்றைக் கையாண்டு வருகிறது. அப்பணிக்குழுவுக்கு சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கும் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங்கும் தலைமை தாங்குகிறார்கள். அவர்கள் இருவரும் நேற்று மெய்நிகர் வழியாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
கொவிட்-19 கிருமித்தொற்று அபாயம் நீடிக்கிறது என்பதை அண்மைய சம்பவங்கள் மீண்டும் நினைவூட்டுவதாக அமைச்சர் கான் குறிப்பிட்டார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டு இருந்தாலும் பாதுகாப்பு நிபந்தனைகளை முற்றிலும் கடைப்பிடித்து சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
டான் டோக் செங் மருத்துவமனையிலிருந்து அண்மையில் வீடுதிரும்பிய நோயாளிகளைக் கண்காணித்து வருவதற்கான பரிசோதனைகளை சுகாதார அமைச்சு நடத்தும்.
அதோடு மட்டுமின்றி, ஏப்ரல் 18ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு அந்த மருத்துவமனைக்குச் சென்று வந்த மக்களும் கண்காணிக்கப்படுவர்.
பாதிக்கப்பட்ட வார்டுகளைச் சேர்ந்த ஊழியர்கள், நோயாளிகள், வருகையாளர்கள் உள்ளிட்ட தொற்று பாதித்தவர்களுடன் அணுக்கத் தொடர்பு கொண்டிருந்த அனைவரும் தனித்து வைக்கப்பட்டுள்ளனர்.மருத்துவமனை கிருமித்தொற்றுக் குழுமத்தில் ஐந்து ஊழியர்களும் எட்டு நோயாளிகளும் அடங்குவர்.
அவர்களில் ஊழியர்கள் நால்வரும் நோயாளிகளில் ஒருவரும் இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். மற்றொரு ஒரு நோயாளி ஒரு முறை ஊசி போட்டுக்கொண்டவர்.