சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனம் தன்னுடைய ஊடகத் தொழில்களை லாபநோக்கமற்ற நிறுவனமாக மாற்றுகிறது. இந்த மாற்றம் காரணமாக அந்தப் புதிய நிறுவனம் அரசாங்க நிதியுதவியைப் பெறமுடியும்.
என்றாலும் கூட அரசாங்கத்திற்கும் செய்தி அறைகளுக்கும் இடைப்பட்ட உறவு பாதிக்கப்படக்கூடாது என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இன்று (மே 10) தெரிவித்து இருக்கிறார்.
எஸ்பிஎச் மீடியா ஒரு புதிய உத்தரவாத நிறுவனமாக மாற்றப்படுவதன் காரணமாக எஸ்பிஎச் செய்தி அறைகளுக்கும் தமது அமைச்சுக்கும் இடைப்பட்ட உறவு பாதிக்கப்படும் என்ற எண்ணமும் எதிர்பார்ப்பும் அரசிடம் இல்லை என்று அமைச்சர்நிலை அறிக்கை ஒன்றில் அமைச்சர் தெரிவித்தார்.
உள்ளூர் செய்தி ஊடகம் சிங்கப்பூரர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நம்பத்தகுந்த நிறுவனங்களாக தொடர்ந்து இருந்து வரவேண்டும் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொண்டு இருக்கிறது என்று அவர் கூறினார்.
எஸ்பிஎச் மீடியாவைச் சேர்ந்த செய்தி ஆசிரியர்களும் செய்தியாளர்களும் செய்திகளையும் பலதரப்பட்ட கருத்துகளையும் உள்ளது உள்ளபடியும் சிங்கப்பூரர்களின் கண்ணோட்டத்திலும் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு தொடர்ந்து இருந்து வருகிறது என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எஸ்பிஎச் நிறுவனம் தன்னுடைய ஊடகத் தொழில்களை லாபநோக்கமற்ற நிறுவனமாக சீரமைக்க தான் திட்டமிடுவதாக சென்ற வியாழக்கிழமை அறிவித்தது. அப்படி அமைக்கப்படும் புதிய நிறுவனம் பொதுமக்களிடம் இருந்தும் அரசாங்கத்திடம் இருந்தும் நிதியைப் பெற முடியும்.
பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளில் இருந்து விடுபட்ட நிலையில், அந்தப் புதிய நிறுவனம் பெரிதும் கட்டிக்காக்கக்கூடிய நிதி நிலையுடன் இருந்துவர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஎச் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, சீரமைப்புக்குப் பிறகு அரசாங்க நிதியைப் பெறுவதன் மூலம் எஸ்பிஎச் நிறுவனத்தைச் சேர்ந்த செய்தித்தாட்களில் இடம்பெறும் செய்திகளின் நேர்மை தன்மை பாதிக்கப்படுமோ என்று கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன. கவலை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்குப் பதிலளித்த திரு ஈஸ்வரன், செய்தித்தாள் மற்றும் அச்சகச் சட்ட ஏற்பாட்டின் கீழ் உள்ளூர் ஊடகங்கள் அரசாங்க தலையீடு இன்றி சுதந்திரமாகச் செயல்படுகின்றன என்றார்.
1974ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், உள்ளூர் செய்தித்தாள் நிறுவனங்களின் உடைமை மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் நிபந்தனைகளை விதிக்கிறது. எஸ்பிஎச் அமைக்கும் புதிய லாபநோக்கமற்ற நிறுவனத்திற்கும் இந்தச் சட்டம் செல்லுபடியாகும் என்றாரவர்.
சிங்கப்பூரர்களுக்காகச் செய்திகளை வெளியிடுகின்ற, சிங்கப்பூரர்களைச் செய்தியாளர்களாகக் கொண்ட, உயர்தரமிக்க, நிபுணத்துவமிக்க, மரியாதைக்குரிய ஊடகம் நாட்டின் அடிப்படை அமைப்பிற்கு முக்கியமான ஒன்று என்று திரு ஈஸ்வரன் கூறினார்.
“சிங்கப்பூர் பல இன சமூகத்தைக் கொண்ட சிறிய ஒரு நகர நாடு. வர்த்தகத்தைச் சார்ந்திருக்கக்கூடிய பொருளியலைக் கொண்ட நாடு. இவை சிங்கப்பூருக்கே உரிய சூழ்நிலைகள்.
“சிங்கப்பூர் ஊடகங்கள் இவற்றுக்கு ஏற்ப பொருத்தமாகச் செயல்பட்டு வருகின்றன. உலக நிகழ்ச்சிகளை சிங்கப்பூரர்கள் கண்ணோட்டம் வழியாக தெரியப்படுத்த அவை உதவுகின்றன.
“உலக நிகழ்ச்சிகள் நம் வாழ்வில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவை பகுத்து ஆராய்கின்றன.
“பூகோளஅரசியல் ரீதியில் போட்டாபோட்டி அதிகமாகும் இப்போதைய யுகத்தில் இந்தப் போக்கு மேலும் முக்கியமானதாக ஆகிறது என்று திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.