சிங்கப்பூரில் நாளை மறுதினம் (மே 16) முதல் உணவகங்கள், உணவங்காடி நிலையங்களில் அமர்ந்து உணவருந்துவதற்கு அனுமதி அளிக்கப்படாது. மேலும், சமூக ஒன்றுகூடல் எண்ணிக்கை தற்போதுள்ள ஐந்திலிருந்து இரண்டாக குறைக்கப்படும்.
சமூக அளவில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் நாளை மறுதினம் (மே 16) முதல் அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
நாள் ஒன்றுக்கு இரு வருகையாளர்களுக்கும் அதிகமானோரை வரவேற்க குடும்பங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது.
உணவகங்களிலும் உணவங்காடி நிலையங்களிலும் உணவை பொட்டலம் கட்டி எடுத்துச் செல்லவும் உணவை வீடுகளுக்கு விநியோகிக்கவும் மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று இன்று (மே 14) அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் பொதுமக்களில் பலரும் சாங்கி விமான நிலையத்திற்குச் சென்றிருக்கலாம் என்பதாலும் அவர்களில் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதாலும் கடும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்று இன்றைய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது கல்வி அமைச்சரும் கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு லாரன்ஸ் வோங் கூறினார்.
சமூகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தெரியாமல் மறைந்திருக்கலாம் எனும் கவலை எழுந்துள்ளதாக திரு வோங் குறிப்பிட்டார். முன்னர் பாதிக்கப்பட்ட எவருடனும் தொடர்பில் இல்லாதபோதும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.