சிங்கப்பூரில் இன்று (ஜூன் 12) புதிதாக 21 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 62,266ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக கொரோனா தொற்றிய 21 பேரில் 12 பேர் சமூகத்தினர். அவர்களில் ஐவரைத் தொடர்பில்லாத வகையில் கிருமி தொற்றியுள்ளது.
தொடர்புடைய மற்ற ஏழு பாதிப்புகளில் இருவர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார்; கண்காணிப்புப் பரிசோதனைகள் மூலம் மற்ற ஐவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் புதிதாக எவரையும் கிருமி தொற்றவில்லை.
எஞ்சிய ஒன்பது பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

