சமூக அளவில் ஒன்பது பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (ஜூன் 20) புதிதாக 11 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் தொற்று உறுதியான அந்த ஒன்பது பேரில் நால்வர், முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள். எஞ்சிய ஐவருக்கு முந்தைய கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்பில்லை.
முன்னதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையோரில் மூவர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டார் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. எஞ்சிய ஒருவருக்கு கண்காணிப்பு பரிசோதனை மூலம் அல்லது சிகிச்சையை நாடிய அவருக்கு மருந்தகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர்.
வெளிநாட்டு ஊழியர் விடுதியில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,414 ஆக உள்ளது.