சில பேரங்காடிகளில் வாரயிறுதி நாளான இன்று (ஜூலை 24) காலை மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டனர்.
மேற்கில் புக்கிட் பாஞ்சாங், ஜூரோங் முதல் கிழக்கில் தெம்பனிஸ் வரை ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளுக்குள் நுழைய வாடிக்கையாளர்கள் குறைந்தது 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
பேரங்காடிக்குள் புகுந்தவுடன் அங்குள்ள கூட்டத்திற்கு மத்தியில் பொருட்களை எடுப்பது பலருக்கும் சவாலாக இருந்தது. பொருட்களை எடுத்துக்கொண்டு அவற்றுக்கு காசாளரிடம் கட்டணம் செலுத்துவதற்கும் நீண்ட வரிசையில் அவர்கள் நிற்க நேரிட்டது.
ஜூரோங் மீன்பிடித் துறைமுக கிருமித்தொற்றுக் குழுமத்தால் இங்குள்ள பல ஈரச்சந்தைகள் பாதிப்படைந்துள்ளன. சந்தைகளில் பல மீன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கடலுணவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்க மக்கள் பேரங்காடிகளுக்குப் படையெடுக்கின்றனர்.
பேரங்காடிகளுக்குச் சென்றவர்களில் பலர், அருகில் உள்ள ஈரச்சந்தைகள் திறந்திருக்கின்றனவா என்பது பற்றித் தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறினர். அதைத் தெரிந்துகொள்வதற்கும் சிரமமாக இருப்பதாக அவர்கள் கூறினர்.