சிங்கப்பூரில் புதிதாக 837 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஓராண்டிற்கு மேற்பட்ட காலத்தில், ஒருநாளில் பதிவான ஆக அதிக பாதிப்பு இதுதான்.
அந்த 837 பேரில் சமூக அளவில் 755 பேர்க்கும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 77 பேர்க்கும் தொற்று உறுதியானது. வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தோரில் ஐவரிடம் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
உள்ளூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களில் 231 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர்.
இதற்கிடையே, ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள ‘ஆல் செயின்ட்ஸ் ஹோம்’ முதியோர் பராமரிப்பு இல்லத்தில் 10 பேர் கொண்ட புதிய தொற்றுக் குழுமம் ஒன்று உருவெடுத்துள்ளது. அவர்களில் ஒன்பது பேர் இல்லத்தில் வசிப்பவர்கள்; எஞ்சிய ஒருவர் அங்கு பணிபுரிபவர்.
மருத்துவமனைகளில் தற்போது 809 பேர் கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 75 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் ஒன்பது பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
செயற்கை உயிர்வாயு தேவைப்படுவோரில் 59 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர்.