அறுபது வயதானவர்களும் அதற்கு மேற்பட்ட வயதுடைய எல்லாரும் அவர்களுடன் வசிப்பவர்களும் சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவல் நிலைமை சீராகும்வரையில் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பாக, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் வெளியில் செல்லாமல் இருப்பதே பாதுகாப்பானது.
கிருமித்தொற்றுக்கு ஆளாகும் அதிகமான முதியவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 30) ஓர் அறிக்கையில் ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவை (ஏஐசி) தெரிவித்துள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்றால் 72க்கும் 90 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள் எட்டுப் பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு புதன்கிழமை (செப்டம்பர் 29) இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்நிலையில், தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே வெளியே செல்லவும், கூட்டம் அதிகமான இடங்களைத் தவிர்க்கவும் முதியோர் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அடுத்த நான்கு வாரங்ளில், அவர்கள் குழு நடவடிக்கைகளையும் சமூகக் கூட்டங்களையும் முடிந்தவரையில் குறைக்க வேண்டும்.
உணவங்காடிகளில் சாப்பிடுவது போன்ற முகக்கவசம் அணியாத நடவடிக்கைகளைக் குறைக்கவும், அதற்குப் பதிலாக உணவை வாக்கிச் செல்லவும் முதியவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
முதியவர்கள் எல்லா நேரங்களிலும் அறுவை சிகிச்சை தர முகக்கவசத்தைச் சரியாக அணிய வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
"முதியவர்கள் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டால் கடுமையான உடல்நல சிக்கல்கள் ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளனர். அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்," என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
நோய்த்தொற்றுக்கு ஆளாவதைக் குறைக்க, தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறு முதியோர் வலியுறுத்தப்படுகின்றனர்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு, இலேசான அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் இல்லாதிருந்தால், முதியவர்கள் மருத்துவமனைக்கு விரையத் தேவையில்லை. அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்று முகவை அறிவுறுத்தியது.
கடந்த இரண்டு வாரங்களில் சமூகத்தொற்றுக்கு உள்ளானவர்களில் கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் 60 வயதும் அதற்கும் மேற்பட்டவர்கள்.
கடந்த மே மாதத்திலிருந்து, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 257 முதியவர்கள் கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றனர். அவர்களுக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்பட்டது அல்லது உயிரிழந்தனர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியோரை உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் கடுமையாக நோய்வாய்ப்படும் ஆபத்து கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகம்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட தகுதியுடைய முதியவர்கள், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதில் உதவி தேவைப்படும் மூத்தோர் 1800-650-6060 அல்லது அவர்களின் அருகில் உள்ள SGO அலுவலகத்தை தொடர்புகொள்ளவும்.

