சிங்கப்பூர் உட்பட அனைத்துலகப் பயணிகள் மலேசியாவுக்கு வர “விரைவில்” அனுமதிக்கப்படலாம் என்று மலேசிய சுற்றுலா, கலைகள், கலாசாரத் துறை அமைச்சர் நான்சி ஷுக்ரி கூறியுள்ளார்.
இரு அண்டை நாடுகளுக்கு இடையே எல்லைகளைத் திறப்பது குறித்து அடுத்த வாரம் சிங்கப்பூர் அதிகாரிகளுடன் தாம் ஆலோசிக்க இருப்பதாக அவர் சொன்னார்.
வரும் நவம்பர் மாதம் அனைத்துலகப் பயணிகளுக்கு எல்லைகளைத் திறக்க மலேசியா இலக்கு வைத்துள்ளது.
அப்போது, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகள் மலேசியாவுக்குள் முதலில் அனுமதிக்கப்படலாம் என்றார் அமைச்சர் நான்சி.
“சிங்கப்பூர் அதன் எல்லைகளை எங்களுக்குத் திறந்திருக்கும் வரை நாங்களும் எங்களது எல்லைகளை சிங்கப்பூருக்குத் திறந்து வைப்போம்,” என்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற சிஎன்பிசி ஊடக நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் நான்சி தெரிவித்தார்.
கொள்ளைநோய் பரவலுக்கு முன்பு வேலைக்காகவும் குடும்பத்தினரை பார்க்கவும் நாள்தோறும் ஏராளமானோர் ஜோகூர் கடற்பாலத்தையும் துவாஸ் இரண்டாவது பாலத்தையும் கடந்து சென்றனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் எல்லைகள் மூடப்படுவதற்கு முன்பு சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையே நாள்தோறும் ஏறத்தாழ அரை மில்லியன் பேர் பயணம் செய்தனர்.
எல்லைகள் மூடப்பட்ட பிறகு 100,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சிங்கப்பூரில் சிக்கிக்கொண்டனர். குடும்பத்தினரைப் பிரிந்துள்ள அவர்கள் எல்லைகள் விரைவில் திறக்கப்படும் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.