முக்கிய வட்டாரங்களில் அமையும் வீட்டுத் திட்டத்தின்கீழ் ரோச்சோரில் 'பிடிஓ' வீடுகள்

முக்கிய வட்டாரங்களில் அமையும் வீட்டுத் திட்டத்தின்கீழ் ரோச்சோரில் 'பிடிஓ' வீடுகள்

2 mins read
116b9092-dab8-49c8-a2a0-2238f41013d6
ரோச்சோர் வட்டாரத்தில் அமையவிருக்கும் புதிய வீடுகள். படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் -

முக்கிய வட்டாரங்களில் அமையவிருக்கும் வீடமைப்புத் திட்டத்தின்கீழ் முதல் திட்டம் ரோச்சோர் வட்டாரத்தில் கட்டப்படவிருக்கிறது. அடுத்த மாதம் இடம்பெறவிருக்கும் தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீட்டுத் திட்டத்தில் வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.

ரோச்சோரில் 960 மூவறை மற்றும் நான்கறை வீடுகள், 40 ஈரறை வாடகை வீடுகள் கட்டப்பட இருக்கின்றன. முக்கிய வட்டாரங்களில் அனைவருக்கும் வீடு கிடைப்பதற்கு ஏதுவாக வீடுகள் கலந்து கட்டப்படுகின்றன.

ஜாலான் புசார் எம்ஆர்டி நிலையத்துக்கு அடுத்துள்ள வெல்ட் ரோடு-கிளந்தான் ரோடு வழியாக உள்ள இரண்டு நிலப்பகுதிகளில் புதிய வீடுகள் அமைகின்றன என்று தேசிய வளர்ச்சி அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் இன்று புதன்கிழமை (அக்டோபர் 27) வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.

சிம் லிம் டவர் அடுத்துள்ள திறந்தவெளி கார்ப்பேட்டையில் ஒரு நிலப்பகுதி அமைந்துள்ளது. மற்றொரு நிலப்பகுதி, சுங்கை ரோடு பகுதியில் அமைந்துள்ளது. முன்பு அங்கு செயல்பட்ட பழைய பொருள் விற்பனைச் சந்தை 2017ல் காலி செய்யப்பட்டது.

ரோச்சோரில் குடியேறும் வீட்டு உரிமையாளர்களுக்கு எம்ஆர்டி நிலையம் அருகில் இருப்பது மட்டுமல்லாமல், பெர்சே உணவு நிலையம், ஸ்டாம்ஃபோர்ட் தொடக்கப்பள்ளி போன்றவை நடக்கும் தூரத்தில் இருக்கும்.

நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 26) செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, ரோச்சோர் வீட்டுத் திட்டத்திற்கு பிறகு, நகர மையத்தைச் சுற்றியுள்ள முக்கிய வட்டாரங்களில் மேலும் பல வீவக வீடுகள் கட்டப்படும் என்றார்.

ஆண்டுக்கு குறைந்தது ஒரு முக்கிய வட்டார வீட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.

முக்கிய வட்டார வீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை வாங்குவோர் அங்கு குறைந்தது 10 ஆண்டுகள் வசிக்க வேண்டும். அதன் பிறகு மறுவிற்பனை சந்தையில் அவ்வீடுகளை வாங்குவோரின் குடும்ப மாத வருமானம் $14,000க்கு மேல் இருக்கக்கூடாது.

குறிப்புச் சொற்கள்